வருகிறது பசுமாடுகளுக்கும் 'ஆதார் அட்டை'.. ரூ148 கோடி ஒதுக்கீடு!
மனிதர்களுக்கு இந்தியாவில் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதைப்போல, பசுமாடுகளுக்கும் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: பசு மாடுகளின் பாதுகாப்புக் குறித்து உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள மத்திய அரசு,விரைவில் பசுக்களின் பாதுகாப்புக்கென அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
பசுவதையைத் தடுக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி இந்தக் குழு 500 பக்கங்கள் அடங்கிய பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

பசு உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாப்பதில், மாநில அரசுகளுக்கு அதிக பொறுப்புள்ளதாக அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு பசு மாடுகளை இறைச்சிக்காக கடத்தியதாகக் கூறி தலித்துகள் சிலரால் அடித்துக்கொல்லப்பட்டனர். மேலும் சில இடங்களில் இஸ்லாமியர்கள் மீதும் இதே போன்று பசுப் பாதுகாப்பாளர்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் பசுக்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கினால், இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடக்காது என்று சமூக ஆர்வலர்கள் கருத்துக் கூறியிருந்தனர். இதைப் பரிசீலித்து தற்போது பசுக்களுக்கும் ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்கப்படும் என்று நிபுணர்கள் குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் சுமார் 9 கோடி பசுமாடுகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றுக்கு மொத்தம் 148 கோடி ரூபாய் செலவில் அடையாள அட்டை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஒரு அடையாள அட்டை 8 ரூபாய் செலவில் மஞ்சள் நிறத்தில் தயாரிக்கப்படும் என்றும் அதில் 12 இலக்க அடையாள எண் இடம்பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications