ஆதார் அட்டை உலகளாவிய அடையாள அட்டை: மத்திய அரசு ஒப்புதல்
டெல்லி: ஆதார் அட்டையானது அரசுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். அரசின் பல்வேறு திட்டங்களுக்கு இந்த அட்டை பயன்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதார் அடையாள அட்டைதாரரின் 10 கைவிரல் ரேகைகளும் பதிவு செய்யப்படுகின்றன, கரு விழிகள் ஸ்கேன் செய்யப்படுகின்றன. மேலும் ஆதார் அட்டைக்காக ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட எண் அளிக்கப்படுவதுடன், அவரது புகைப்படமும் அதில் ஒட்டப்படுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற உடன் , ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த ஆதார் அடையாள அட்டை விவகாரத்தில் மக்கள் சமர்ப்பிக்கும் பல்வேறு ஆவணங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சகம் கவலை தெரிவித்திருந்தது. தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.
இந்த அட்டைக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், இது பயனாளிகளுக்கு எந்த நேரத்திலும், எங்கும், எப்போதும் அங்கீகாரத்தை எளிதாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சேவைகளைப் பெற உதவி
ஆதார் அட்டை பின்தங்கிய மக்கள், வங்கி வசதி உள்ளிட்ட உரிய சேவைகளைப் பெற உதவியாக இருக்கும்.
வாடிக்கையாளர் விபரம்
ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஒருவர் வங்கிக் கணக்கைத் தொடங்க முடியும். "உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்' என்ற ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி வாடிக்கையாளரை அறிந்து கொள்ள இந்த அட்டை உதவிகரமாக உள்ளது.
டிக்கெட் புக்கிங்
மேலும் இந்த அட்டையைப் பயன்படுத்தி ஆன்-லைனில் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கிராம மக்களுக்கு
கிராமப்புற மக்களுக்கான திட்டங்களையும், வசதிகளையும் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கு இந்த அட்டையானது அரசுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் அட்டை பயன்படுத்தப்படும்.
உலகளாவிய அடையாளம்
வேறு நாடுகளுக்கு குடிபெயர்வோர் இந்த அட்டையை உலகளாவிய அடையாள அட்டையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மோசடி கிடையாது
மக்கள்தொகை, தனிப்பட்டவரின் "பயோ மெட்ரிக்' தகவல்களின் அடிப்படையில் ஆதார் அட்டை தயாரிக்கப்பட்டுள்ளதால், மோசடி, போலி செயல்பாட்டு அச்சுறுத்தல்களை இது நீக்குகிறது.
சர்வதேச அடையாளம்
ஆதார் அட்டையை வைத்திருப்போருக்கு அது, சர்வதேச அடையாளத்தை வழங்குகிறது. இந்த அட்டையானது எந்த நேரமும், எங்கேயும், எப்படியும், பயனாளிகளின் அங்கீகாரத்தை எளிதாக்கும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.