சினிமாவை மிஞ்சும் த்ரில்.. துப்பாக்கி முனையில் மிரட்டல்? வேட்பு மனுவை வாபஸ் பெற்ற AAP வேட்பாளர்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் சூரத் நகர் கிழக்கு தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் 'காஞ்சன் ஜரிவாலா' பாஜகவினரால் கடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இன்று அவர் தனு வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.
இது குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்த ஆம் ஆத்மி கட்சியினர், டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகம் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, "வேட்பு மனுவை வாபஸ் பெறும்படி ஆம் ஆத்மி வேட்பாளர் வலியுறுத்தப்பட்டார்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

துப்பாக்கி முனையில்
மேலும், "காஞ்சன் ஜரிவாலா 500 போலீஸ்காரர் சூழ்ந்த நிலையில் தேர்தல் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும் எனும் அழுத்தம் அவருக்கு இருந்திருக்கிறது. காவல்துறையினரும் அவரை கட்டாயப்படுத்தியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதை நான் தேர்தல் ஆணையத்திற்கு கூற விரும்புகிறேன். வேட்பாளரை கடத்தி துப்பாக்கி முனையில் வேட்புமனுவை வாபஸ்பெற வைத்துள்ளனர் சிலர். இதைவிட அவசர நிலை வேறென்ன இருக்க முடியும்? தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

நகைச்சுவை
அதேபோல கட்சியின் எம்பியும் செய்தி தொடர்பாளருமான ராகவ் சாதா கூறுகையில், "காவல்துறையினரும், பாஜக குண்டர்களும் சூரத் கிழக்கு தொகுதியின் நமது வேட்பாளரை தேர்தல் அலுவலகத்திற்குள் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று வேட்புமனுவை வாபஸ் வாங்க வைத்ததை பாருங்கள். சுதந்திரமான மற்றும் ஜனநாயக தேர்தல் எனும் வார்த்தை இதன் மூலம் நகைச்சுவைக்கு உள்ளாகி விட்டது" என்று கூறி இது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளார். தேர்தலில் தோற்றுவிடுவோம் என்கிற பீதியில் இருப்பதால்தான் இது போன்ற நடவடிக்கைகளில் பாஜக இறங்கியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

மணீஷ் சிசோடியா
முன்னதாக நேற்றிலிருந்து அவர் காணாமல் போனதையடுத்து பாஜக மீது மணீஷ் சிசோடியாக கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் "காஞ்சன் நேற்றிலிருந்து காணவில்லை. அவர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினரும் காணவில்லை. வேட்புமனு பரிசீலனைக்கு அவர் சென்றிருந்தார். அதை முடித்துவிட்டு திரும்பும் போது பாஜக குண்டர்களால் அவர் கடத்தப்பட்டுள்ளார். ஏற்கெனவே இந்த தொகுதியில் பாஜக ஆதிக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் பாஜகவினர் வேட்புமனுவையே தாக்கல் செய்ய விடவில்லை.

ஜனநாயகம்
இருப்பினும் நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் நாங்கள் மனுத்தாக்கல் செய்திருந்தோம். பின்னர் வேட்புமனுவை வாப்பஸ் வாங்க சொல்லி அவர்கள் மிரட்டினார்கள். அப்போதும் நாங்கள் அசைந்து கொடுக்கவில்லை. இந்நிலையில்தான் வேட்புமனு பரிசீலனைக்காக காஞ்சன் சென்றிருந்தார். தற்போது அவரும் அவரது குடும்பத்தினரும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் வேட்பாளர்களை கடத்தவில்லை 'ஜனநாயகத்தை' கடத்தி இருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

கெஜ்ரிவால்
அதேபோல, "சூரத் கிழக்கு தொகுதியின் வேட்பாளர் 'காஞ்சன் ஜரிவாலா' நேற்றிலிருந்து காணவில்லை. முதலில் பாஜகவினர் இவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வைக்க முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. தேர்தல் ஆணையத்தால் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு இருக்கையில் தற்போது திடீரென 'காஞ்சன் ஜரிவாலா' மற்றும் அவரது குடும்பத்தினர் காணாமல் போயுள்ளனர். அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது" என்று ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications