அருண் ஜேட்லி வீட்டு முன் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
டெல்லி: ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க முயற்சித்ததாக கூறி பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லியின் வீட்டு முன்பு டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக முயற்சிக்கிறது.. அருண் ஜேட்லி, மோடிக்கு நெருக்கமான நபர்கள் பல கோடி ரூபாய் கொடுத்து பேரம் பேசுகின்றனர் என்பது ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களின் புகார்.
இந்த புகாரை பாஜக தலைவர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் நிராகரித்துள்ளனர். ஆனால் இதை ஏற்க மறுத்து போராட்டம் நடத்தப் போவதாக ஆம் ஆத்மி கட்சியினர் அறிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று காலை டெல்லியில் அருண் ஜேட்லியின் வீட்டு முன்பு திரண்ட ஆம் ஆத்மி கட்சியினர் கண்டன போராட்டம் நடத்தினர். ஆம் ஆத்மியினரின் இப் போராட்டத்துக்கு எதிராக பாஜகவினரும் போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.