மத்திய அரசு டிஸ்மிஸ் செய்த சஞ்சீவ் சதுர்வேதியை டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு தலைவராக்கும் கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஊழல் நடந்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பதவியை இழந்த சஞ்சீவ் சதுர்வேதியை ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக்க ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.
ஐ.எப்.எஸ். அதிகாரியான சஞ்சீவ் சதுர்வேதி டெல்லியில் உள்ள மத்திய அரசு நடத்தும் எய்ம்ஸ் மருத்துவமனையின் லஞ்ச ஒழிப்பு பிரிவின் தலைவராக இருந்தார். அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் நடக்கும் ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். ஆனால் மத்திய அரசோ அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் டெல்லி முதல்வராக நாளை பதவியேற்க உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சதுர்வேதியை டெல்லி ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக ஆக்க திட்டமிட்டுள்ளார்.

சஞ்சீவ் சதுர்வேதி ஒரு நேர்மையான அதிகாரி. அவர் ஊழல் தடுப்பு பிரிவில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என டெல்லி துணை முதல்வராக பொறுப்பேற்கும் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு பிரிவின் தலைவர் பதவியில் இருக்க சதுர்வேதிக்கு தகுதி இல்லை என்று கூறி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அவரை கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி நீக்கம் செய்தது.
சதுர்வேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை பார்த்த 2 ஆண்டுகளில் பல விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பயணம் செய்த அதிகாரிகள், எய்ம்ஸ் புற்றுநோய் மையத்தில் அதிகாரி ஒருவர் தனது செல்ல நாய்க்கு அறுவை சிகிச்சை செய்தது உள்ளிட்டவை குறித்து அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications