‘பிஜ்லி சத்யாகிரஹா’வில் கலந்து கொண்டவர்களுக்கு 50% மானியம்: கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லி: கடந்த ஆண்டுகளில் ஆம் ஆத்மியோடு இணைந்து மின்கட்டண உயர்வுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தியவர்களுக்கு மின் கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் அளிப்பதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது மின்கட்டணம் அதிகரிக்கப் பட்டது. அப்போது அதனை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். மக்களை மின்கட்டணம் செலுத்தாமல் அரசுக்கு எதிராக போராடுமாறு அழைப்பு விடுத்தனர்.
ஆம் ஆத்மியினரின் அழைப்பை ஏற்று பலர் மின்கட்டணம் செலுத்தவில்லை. இந்நிலையில், நடந்து முடிந்த டெல்லி மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆதரவோடு அங்கு ஆட்சி அமைத்துள்ளது.தேர்தல் வாக்குறுதியில் சொல்லப் பட்டிருந்தபடி, ஆட்சியில் அமர்ந்ததும் டெல்லி மின்கட்டணத்தைக் குறைத்தார் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால்.
இந்நிலையில், தங்களது அழைப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வெகுமதியாக அப்போது கட்டத்தவறிய மின்கட்டணத்தில் ஐம்பது சதவீதம் மானியம் அளித்து உத்தரவிட்டுள்ளார் கெஜ்ரிவால்.

போராட்டம்...
டெல்லியில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சியினர் 'பிஜ்லி சத்யாகிரஹா' என்றா போராட்டத்தைத் துவக்கினர்.

ஆதரவு தந்த மக்கள்....
கடந்த 2012 ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் நடந்த அந்தப் போராட்டத்தில் சுமார் பத்து லட்சம் மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தினார்கள். ஆம் ஆத்மியின் அழைப்பை ஏற்று சுமார் இருபத்தி நாலாயிரம் டெல்லி குடும்பங்கள் தங்களது மின்கட்டணத்தை கட்டவில்லை.

பதிலுக்குப் பதில்...
தற்போது, மின் கட்டணம் செலுத்தாமல் போராட்டம் நடத்திய அந்தக் குறிப்பிட்ட இருபத்தி நாலாயிரம் குடும்பங்களுக்கு மின் கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.

என்ஜாய், அபராதமும் இல்லை....
மேலும், அவர்களுக்கு அபராதம் தள்ளுபடி செய்யப் படுவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் அரசு தனது பங்கிற்கு ரூ. 6 கோடி அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications