மோடி மெட்ரோவை துவங்கி வைத்தது சரி, கெஜ்ரிவாலை ஏன் அழைக்கவில்லை?: ஆம் ஆத்மி
டெல்லி: பதர்பூரில் இருந்து ஃபரீதாபாத் இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை துவக்க விழாவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏன் அழைக்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி டெல்லி மெட்ரோ ரயில் கார்பரேஷனை கேட்டுள்ளது.
டெல்லியில் உள்ள பதர்பூரில் இருந்து ஹரியானா மாநிலத்தில் உள்ள ஃபரீதாபாத் இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை துவங்கி வைத்து ரயிலில் பயணம் செய்தார்.
மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு இணைந்து நடத்துவது தான் டெல்லி மெட்ரோ ரயில் கார்பரேஷன்(டிஎம்ஆர்சி) ஆகும். இந்நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவக்க விழாவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அழைக்காததற்கு டிஎம்ஆர்சிக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து மூத்த டிஎம்ஆர்சி அதிகாரி கூறுகையில்,
மெட்ரோ ரயில் போக்குவரத்து துவக்க விழாவிற்கு நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை. ஹரியானா அரசு தான் ஏற்பாடு செய்திருந்தது. டிஎம்ஆர்சி மீடியா உள்பட யாரையுமே அழைக்கவில்லை. பதர்பூர்-ஃபரீதாபாத் இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஹரியானா அரசு நிதி ஒதுக்கியது. ஏனென்றால் இத்திட்டத்தின்கீழ் வரும் 9 நிலையங்கள் ஹரியானாவில் உள்ளது.
டெல்லியில் உள்ள பகுதிக்கு மட்டும் டெல்லி அரசு நிதி ஒதுக்கியது என்றார்.