வாஜ்பாயின் சகோதரர் மகள் பாஜகவில் இருந்து விலகினார்: காங்கிரஸில் சேர்கிறார்

பாஜக மூத்த தலைவர் வாஜ்பாயின் சகோதரரின் மகள் கருணா சுக்லா(61). அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் பாஜக மஹிலா மோர்ச்சாவின் தேசிய துணை தலைவராகவும் இருந்தவர். சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிற நிலையில் அவர் பாஜகவில் இருந்து நேற்று விலகியுள்ளார்.
கட்சியில் இருந்து விலகுவதாக அவர் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து பாஜகவின் துணை தலைவராக இருந்த அவர் கூறுகையில்,
கட்சியின் முக்கிய விவகாரங்கள் குறித்து யாரும் என்னிடம் பேசுவதில்லை. பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூட என்னிடம் கட்சி விவகாரங்கள் பற்றி பேசுவதில்லை. நான் சத்தீஸ்கர் மாநிலம் பெல்தாரா தொகுதியில் போட்டியிட விரும்பினேன். ஆனால் என்னை கோர்பா தொகுயில் போட்டியிடுமாறு வற்புறுத்தினார்கள்.
நான் கட்சிக்காக 32 ஆண்டுகள் உழைத்து பல்வேறு பதவிகள் வகித்துள்ளேன். ஆனால் என்னால் கட்சிக்கு எந்த பயனும் இல்லை என்ற நிலைமை வந்துள்ளதை நான் உணர்ந்துவிட்டேன்.
மாநிலத்தில் உள்ள மூத்த தலைவர்கள் பேசுவதை கட்சி கேட்பதில்லை. சிலர் தங்கள் கையில் அதிகாரத்தை வைத்துக் கொண்டு இஷ்டம் போல் செயல்படுகின்றனர் என்றார்.
இந்நிலையில் அவர் காங்கிரஸில் சேரப் போவதாக பேச்சு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications