3 வருடமாக கேரள போலீஸுக்கு ஆட்டம் காட்டிய "ஆடு" ஆண்டனி கைது...!
பாலக்காடு: கேரள போலீஸாருக்கு கடந்த 3 வருடமாக தண்ணீர் காட்டி வந்த ஆடு ஆண்டனி என்கிற ஆண்டனி வர்கீஸ் என்ற பயங்கரமான குற்றவாளியை போலீஸார், தமிழகத்தில் வைத்துக் கைது செய்து அள்ளிச் சென்றுள்ளனர்.
இந்த ஆடு ஆண்டனியைப் பிடிக்க பல்வேறு மாநிலங்கள், நேபாளம் என சல்லடை போட்டு தேடி வந்ததாம் கேரள போலீஸ். 3 வருடமாக இவர் சிக்கவில்லை. போக்கு காட்டி வந்தார்.
100க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளதாம். கிட்டத்தட்ட கேரளாவின் அனைத்துப் பகுதிகளிலும் இவர் மீது வழக்குகள் உள்ளனவாம். கடுமையாக ஆட்டம் காட்டி வந்த "ஆடு" கடைசியில் தமிழகத்தில் வைத்து சிக்கியுள்ளது.
கோபாலபுரத்தில் சிக்கினார்
தமிழக, கேரள எல்லையில் உள்ள கோபாலபுரம் என்ற ஊரில் வைத்து ஆடு ஆண்டனி கேரள போலீஸாரிடம் சிக்கினார். அவரைக் கைது செய்த போலீஸார் பின்னர் பலத்த பாதுகாப்புடன் பாலக்காட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
"மனைவி" வீட்டில்
ஆடு ஆண்டனிக்கு ஏகப்பட்ட மனைவிகள் உள்ளனராம். அதில் ஒரு மனைவியின் வீடு இந்த கோபாலபுரத்தில் உள்ளதாம். இங்குதான் பதுங்கியிருந்துள்ளார் அவர். அங்கு வைத்துத்தான் அவரைக் கைது செய்தது கேரள போலீஸ்.
கொலை செய்து விட்டு ஓட்டம்
கடந்த 2012ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி கொல்லம் நகரில் ஒரு போலீஸ் அதிகாரி ஆடு ஆண்டனியைப் பிடிக்க முயன்றபோது அவரை குத்தி விட்டுத் தப்பினார் ஆண்டனி. இதைப் பார்த்த மணியன் பிள்ளை என்பவர் ஆண்டனியைப் பிடிக்க முயன்றபோது அவரை குத்திக் கொன்று விட்டுத் தப்பினார் ஆண்டனி். அன்று முதல் தலைமறைவாக இருந்து வந்தார்.
3 வருடமாக ஆட்டம் காட்டிய ஆண்டனி
அவரைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வந்தனர். பல மாநிலங்களுக்கும் போலீஸ் குழுக்கள் போய் வந்தன. நேபாளத்திற்கும் கூட போலீஸ் குழு சென்று தேடியது. ஆனால் சிக்கவில்லை.
போலீஸ் குழுவுக்கு அமைச்சர் பாராட்டு
3 வருட தேடுதலுக்குப் பின்னர் ஒரு வழியாக தமிழகத்தில் வைத்து சிக்கிய ஆண்டனியைப் பிடித்த போலீஸாருக்கு கேரள மாநில போலீஸ் துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா பாராட்டு தெரிவித்துள்ளார்.
மாபெரும் சாதனை.. டிஜிபி
இதுகுறித்து டிஜிபி டி. பி. செங்குமார் கூறுகையில், கேரள காவல்துறையின் மிகப் பெரிய சாதனை இது. விரைவில் ஆடு ஆண்டனி கொல்லம் கொண்டு வரப்படுவார் என்றார் அவர்.