ஜெ,சசி வங்கி பரிவர்த்தனைகள் ஆவணம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்- ஆச்சார்யா இறுதி வாதம் நிறைவு!!
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் வங்கி பண பரிவர்த்தனை ஆவணங்களை கர்நாடகா அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அவர் தம்முடைய இறுதிவாதத்தை இன்று நிறைவு செய்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மற்றும் திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்சில் நடைபெற்று வருகிறது.

8-வது நாளான நேற்றைய விசாரணையில் கர்நாடக அரசு தரப்பு வக்கீல் பி.வி.ஆச்சார்யா, ஜெயலலிதா உள்ளிட்டோரின் கட்டிடங்கள் மதிப்பீடு தொடர்பாக கர்நாட்கா உயர்நீதிமன்றத்தின் (நீதிபதி குமாரசாமி தீர்ப்பில்) கணக்கில் நிறைய தவறுகள் உள்ளன. 17 கட்டிடங்களின் மதிப்பு ரூ.27 கோடி என்று ஊழல் தடுப்பு பிரிவு மதிப்பிட்டுள்ளது. ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்றமோ வெறும் ரூ.5 கோடியே 10 லட்சத்தை மட்டுமே கட்டிடங்களின் மதிப்பாக எடுத்துக்கொண்டு உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, இது ஏதோ மீண்டும் கீழ்நீதிமன்ற விசாரணையை 2-வது முறையாக மீண்டும் தொடங்குவது போல இருக்கிறது. இந்த கட்டிடங்களின் மதிப்பீடு தொடர்பான விஷயத்தில் உயர்நீதிமன்றம் எந்தெந்த இடங்களில் தவறு செய்துள்ளது என்பதை சுருக்கமான விவரங்களுடன் தாக்கல் செய்யுங்கள். அதில் பரப்பளவு, 1994-ம் ஆண்டில் பொதுப்பணித்துறை வரையறுத்த சதுர அடிக்கான மதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கிட்டு பட்டியல் தாக்கல் செய்யுங்கள் என்றனர்.
ஆச்சார்யா தனக்கு வாதாட தொடர்ந்து நேரம் ஒதுக்கவேண்டும் என்று கேட்டார். அதற்கு நீதிபதிகள், இன்று நீதிபதி அமித்வா ராய் மதியத்துக்கு மேல் இந்த பெஞ்சில் இருக்க மாட்டார் என்பதால் காலையில் 1 மணி நேரம் வாதாடி தமது வாதங்களை முடித்துக்கொள்ளலாம் என்றனர்.
மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தனது வாதங்களை முன்வைக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவருக்கு வாதாட 1 மணி நேரம் ஒதுக்குவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் வங்கி பணபரிவர்த்தனை ஆவணங்களை பிவி ஆச்சார்யா தாக்கல் செய்து இறுதிவாதத்தை முன்வைத்தார். மேலும் இளவரசியும் சுதாகரனும் சில நிறுவனங்கலின் இயக்குநராக இருந்ததையும் ஆச்சார்யா சுட்டிக்காட்டினார்.
கர்நாடகா அரசு சார்பில் ஏற்கனவே மூத்த வழக்கறிஞர் தவே ஆஜராகி தமது இறுதி வாதத்தை நிறைவு செய்திருந்தார். இந்நிலையில் இன்று மற்றொரு மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யாவும் தமது இறுதிவாத்தை நிறைவு செய்தார்.












Click it and Unblock the Notifications