ஆசிட் வீச்சில் போன வாழ்க்கை: சுப்ரீம் கோர்ட் நீதிபதி மூலம் திரும்ப கிடைத்தது

அனுவுக்கு 10 வயதான போதே பள்ளிப் படிப்பு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தையல் மிஷினை வாங்கி போட்டு கூலிக்கு துணிகளை தைத்து, தானும் சாப்பிட்டு தம்பியை படிக்க வைத்தார்.
தையல் தொழிலில் குறைந்த அளவு வருமானம் மட்டுமே கிடைத்ததால், தோழிகளின் அறிவுரையின்படி டெல்லி ஜனநகர் பகுதியில் உள்ள பாரில் டான்சராக வேலையில் சேர்ந்தார்.
10 ஆண்டு காலம் அந்த ஓட்டலின் முடிசூடா ராணியாக வலம் வந்த அனுவிற்கு உடன் வேலை பார்க்கும் அதே ஓட்டலில் நடனமாடும் சக டான்ஸர் மீனா கான் என்ற பெண்ணின் மூலம் பிரச்சினை வந்தது.
அனுவின் வளர்ச்சி கண்டு பொறுக்காத மீனா கான், அனுவை ஒழிக்க திட்டமிட்டார். 19-12-2004 அன்று ஓட்டலுக்கு செல்வதற்காக ஆட்டோவில் ஏறப்போன அணுவின் முகத்தில் மீனாவின் சகோதரன் ஆசிட்டை ஊற்றினான். துடிதுடித்து சுருண்டு விழுந்து கதறிய அவரை அக்கம்பக்கத்தினர் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
15 லட்சம் ரூபாய் வரை செலவழித்து 8 ஆபரேஷன்கள் செய்த பின்னரும் அவரது முகம் பழைய நிலைக்கு திரும்பவில்லை. விகாரமான முகத்துடன் வெளியே தலைகாட்ட விரும்பாத அவர் வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்க நேரிட்டது.
இதற்கிடையே, அழகும் இளமையும் வசீகரமும் இருந்த வரை மலரை மொய்க்கும் வண்டாக அணுவை சுற்றிச்சுற்றி வந்து காதலித்து திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி தந்த ஒருவன், அணுவின் நிலையை கண்டு நைசாக உருவிக்கொண்டான்.
முகம் வெந்தபோது அடைந்ததைவிட உயிருக்குயிராக காதலித்தவன் உதறி விட்ட போனதை எண்ணி இரட்டிப்பு வலியையும் வேதனையையும் அனுபவித்த அவர் நடைப்பிணமாகவே ஆகிப் போனார். குடும்ப கஷ்டத்தை போக்க அணுவின் தம்பி வேலைக்கு போய்கொண்டு வந்து தந்த சொற்ப சம்பளத்தில் அவர்களின் வாழ்க்கை நகர்ந்தது.
அதே சமயம், ஆசிட் வீச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மீனாவுக்கும் அவரது சகோதரருக்கும் 2011-ம் ஆண்டில் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது, டெல்லி குடிசைப் பகுதியில் வசித்து வரும் அணுவின் அவல வாழ்க்கை பற்றிய செய்தி தொகுப்பு 2 மாதங்களுக்கு முன்னர் ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியை பார்த்த லட்சக்கணக்கானவர்களில் உச்சநீதிமன்றத்தில் ஆசிட் வீச்சு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி குரியன் ஜோசப்பும் ஒருவர்.
அனுவின் கதையை அறிந்து மனம் உருகிப்போன அந்த நீதியரசர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு உச்சநீதிமன்றத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கும்படி பதிவாளருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
ஒரு நீதிபதியாக இல்லாமல் சராசரி மனிதனாக அந்த பெண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அணுவின் இடத்தில் எனது மகளோ, சகோதரியோ இருந்தால் என்ன செய்வேனோ..? அதையே தான் நான் அணுவுக்கும் செய்துள்ளேன் என்று மிக எளிமையாகவும், சுருக்கமாகவும் கூறுகிறார், நீதிபதி குரியன் ஜோசப்.












Click it and Unblock the Notifications