நீதியை கல்லறைக்கு அனுப்பிய ஹைகோர்ட் தீர்ப்பு: ஜெ. அப்பீல் மனுவில் அரசு தரப்பு ஆக்ரோஷம்!
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பு நீதியை கல்லறைக்கு அனுப்பிவிட்டதாக, மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது அரசு தரப்பு.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து, ஆச்சாரியா தலைமையிலான வழக்கறிஞர் குழு தயாரித்த மேல்முறையீட்டு மனு கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஹைகோர்ட் தீர்ப்பின் குழறுபடிகள், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வரிசையாக எடுத்து வைக்கப்பட்டன. அவை தற்போது ஒவ்வொன்றாக வெளியே வர ஆரம்பித்துக்கொண்டுள்ளன.

ஆயிரம் பக்க வரலாறு
ஆயிரம் பக்கங்களை தாண்டிய மேல்முறையீட்டு மனுவில் 1002 பக்கங்கள் வரை வழக்கின் வரலாறு மற்றும், ஹைகோர்ட் நீதிபதி வழங்கிய தீர்ப்பின் பிரதி உள்ளது. அதன்பிறகுதான், நேரடியாக பாயிண்டுக்கு வந்துள்ளது மேல்முறையீட்டு மனு.

குமாரசாமி கண்டுகொள்ளவில்லை
சொத்து வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி் ஜான் மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பை எதிர்த்து, தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது, தமிழக அரசு தன்னிச்சையாக அரசு வழக்கறிஞரை நியமித்ததில் தொடங்கி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பல குளறுபடிகள் நிகழ்ந்தன. அவற்றில் தலையிட்டு நீதிபதி குமாரசாமி, ஒருமுறைகூட திருத்தவில்லை.

உச்சநீதிமன்றத்தை புறக்கணித்தார்
பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது செல்லாது.. என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் எப்படித் தீர்ப்பளிக்க வேண்டும் என்று, நீதிபதி குமாரசாமிக்கு பல வழிகாட்டுதல்களை எடுத்துரைத்தது. அதில் ஒன்றைக்கூட அவர் கடைப்பிடிக்கவில்லை. மொத்தமாக நீதியைக் கல்லறைக்கு அனுப்பி சமாதி கட்டிய தீர்ப்பாக குமாரசாமியின் தீர்ப்பு உள்ளது.

அந்த வழக்கு பொருந்தாது
ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்வதற்கு அக்னிஹோத்ரி வழக்கை முன்னுதாரணமாகக் காட்டி உள்ளார் நீதிபதி குமாரசாமி. அந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக அக்னிஹோத்ரியிடம் இருந்த சொத்து மதிப்பு வெறும் 11 ஆயிரத்து 350 ரூபாய். அது சேர்க்கப்பட்ட காலம் 13 ஆண்டுகள். சொத்து சேர்க்கப்பட்ட காலத்தை ஒப்பிடும்போது அக்னிஹோத்திரியின் வருமானம் மிகக்குறைவு. அதனால்தான் அந்த வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார்.

புது சட்டம் வந்துவிட்டதே
ஜெயலலிதா வழக்கில் வருமானம் பல கோடிகள். அது ஈட்டப்பட்ட வருடங்கள் மிகக் குறைவு. அதுவும் 1947 சட்டப்படி தான் அக்னிஹோத்ரி விடுதலை செய்யப்பட்டார். அதன்பிறகு, ஊழல் தடுப்புச் சட்டம் 1988ஆக என சட்டம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. அதில், பிரிவு 13 (1) (e) நியாயமான வருமானம் என்பது ‘நியாயமான வழிகளில் வந்த வருமானம் மட்டுமே' என்று தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், வருமானத்துக்கு அதிகமாக ஏதாவது சொத்துகள் பொது ஊழியருக்கு வரும்போது, அதுபற்றி அவர் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு உரிய தகவல்களைத் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும் என்றும் வரையறுத்துள்ளது.இதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.

ஆவணங்களை பார்க்கவில்லை
குமாரசாமி தனது தீர்ப்பில், கட்டடங்களின் மதிப்பீடுகள், வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவுகள், கடன் மூலம் வந்த வரவுகள், திராட்சைத் தோட்ட வருமானம், பரிசுப் பொருள்கள் மூலம் வந்த வருமானங்கள், சசி என்டர்பிரைஸஸ், ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் மூலம் வந்த வருமானங்கள், சூப்பர் டூப்பர் டி.வி, வாடகை வருமானம் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளார். ஆனால், இதுபற்றிய ஆதாரங்களும் ஆவணங்களும் ஏராளமாக இருக்கும்போது அவற்றை எல்லாம் சரியாகப் பரிசீலிக்காமல் தவறு செய்துள்ளார்.

குன்ஹா குறைத்தார்
ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கட்டடங்களின் மதிப்பு என அரசுத் தரப்பு 28 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரத்து 430 ரூபாயைக் கணக்கிட்டது. அதனைத் நன்கு ஆராய்ந்து அந்தத் தொகையில் இருந்து 20 சதவிகிதத்தை சிறப்பு நீதிமன்றம் குறைத்துவிட்டு, 22 கோடியே 53 லட்சத்து 92 ஆயிரத்து 344 ரூபாயைக் கட்டடங்களின் மதிப்பாக எடுத்துக்கொண்டது.

மேலோட்டமாக பார்த்த குமாரசாமி
ஆனால், நியாயமான கணக்கீடுகள், மதிப்பீடுகள், கட்டடங்களின் ஆடம்பரத் தன்மை, கட்டடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கிரானைட்கள், மார்பிள்கள், அதில் செய்யப்பட்ட வேலைப்பாடுகள், கட்டடங்களில் இருந்த சொகுசு இருக்கைகள், நாற்காலிகள், மேஜைகள், அவற்றின் கலை வேலைப்பாடுகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு, ஒரு சதுர அடிக்கு 28 ஆயிரம் ரூபாய் என மேலோட்டமாக நீதிபதி குமாரசாமி கணக்கிட்டுள்ளார்.

காவல்காரர் அறையும், பங்களாவும் ஒன்றா?
பொதுப்பணித் துறை பொறியாளர்கள், போயஸ் கார்டன் இல்லத்தின் மதிப்பு 7 கோடி ரூபாய் என்று கணக்கிட்டனர். இந்த மதிப்பீடு மிகவும் அதிகம் என்று குறிப்பிட்ட நீதிபதி குமாரசாமி, மொத்தமாக 17 கட்டடங்களையும் ஒரே மதிப்பில் கணக்கிட்டுள்ளார். காவல்காரருக்கு கட்டப்படும் அறையை எப்படி 17 கட்டடங்களுக்கு பொதுவாக நீதிபதி எடுக்க முடியும். கட்டிடங்களின் தன்மை, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருள்களின் தரம் வேறு என்பதையெல்லாம் நீதிபதி குமாரசாமி கண்டுகொள்ளவில்லை.

அவர்களே ஒப்புக்கொண்டனர்
இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதா தரப்பு சிறப்பு நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த சாட்சியத்தில், தங்களின் கட்டட மதிப்பு ரூ.8 கோடியே 60 லட்சம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தரப்பு ஒப்புக்கொண்ட மதிப்புக்கும் குறைவாக நீதிபதி குமாரசாமி மதிப்பிட்டது முறையற்றது. இவ்வாறு நீள்கிறது அந்த மேல்முறையீட்டு மனு அம்சங்கள்.












Click it and Unblock the Notifications