வீடிழந்த கிராம மக்கள்! ஆறுதல் கூற சென்ற பவன் கல்யாண் அட்ராசிட்டி! தெலுங்கு பட பாணியில் மாஸ் பயணம்!
அமராவதி: ஆந்திராவில் சாலை விரிவாக்க பணிகளுக்காக வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் தர தனது ஆதரவாளர்களுடன் ஜனசேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் மாஸாக காரில் சென்ற காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகரும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாண் கடந்த 2014 இலே ஒரு அரசியல் கட்சியை உருவாக்கினார். அதற்கு ஜனசேனா கட்சி என பெயரிட்டார். ஜனசேனா என்றால் மக்கள் ராணுவம் என்று பொருள்.
இவர் ஆந்திராவின் குண்டூரில் உள்ள இப்டாம் எனும் கிராமத்திற்கு சென்றார். இவர் சென்ற வீடியோ தற்போது வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த கிராமத்தில் சாலை விரிவாக்க பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

ஆந்திர அரசு
இதற்காக ஆந்திர அரசால் வீடுகள் இடிக்கப்பட்டன வீடுகளை இழந்த பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற தனது ஆதரவாளர்களுடன் இப்டாம் கிராமத்திற்கு பவன் கல்யாண் செல்லவுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ரசிகர்கள்
அவரது வருகையை அறிந்த அவருடைய ரசிகர்கள், தொண்டர்கள் இப்டாம் பகுதியில் குவிந்தனர். இவருடைய இந்த நிகழ்வுக்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. எனினும் காவல் துறை அனுமதியளிக்காமல் பவன் கல்யாண் காரில் சென்றார். தனது காரில் அவர் மேற்கூரையில் அமர்ந்தபடி சென்றார்.

ஆதரவாளர்கள்
அவரது காரை சுற்றி நிறைய ஆதரவாளர்கள் நின்றிருந்தனர். சாவகாசமாக காரின் மேற்கூரையில் கால்களை நீட்டி உட்கார்ந்தபடி சென்று கொண்டிருந்தார். அவரது காரில் அவருடைய கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர் ஏறி நின்று கொண்டிருந்தனர்.அவர்களும் பாதுகாப்பற்ற முறையில் தொங்கிக் கொண்டே நின்றிருந்தனர்.

டிரோன் கேமரா பதிவு
டிரோன் கேமரா பதிவு, வீடியோகிராபர், போட்டோகிராபர் புடைச் சூழ பவன் பயணித்திருக்கிறார். ஏதோ தெலுங்கு படத்தில் வரும் வில்லனை போல் காரில் மாஸாக பயணித்திருக்கிறார். இவருடன் 10 கார்களும் சென்றன. அந்த கார்களிலும் தொண்டர்கள் தொங்கிக் கொண்டே சென்றனர். பைக்கில் பயணித்தவர்கள் யாரும் ஹெல்மெட் போடவில்லை. இந்த காட்சிகள் வெளியானது.

பவன் கல்யாண் கார்
பாதி வழியில் பவன் கல்யாணின் காரை மடக்கிய போலீஸார் இப்டாம் செல்ல அனுமதியில்லை என போலீஸார் கூறியதும் பவன் கல்யாண் சில கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றிருக்கிறார். அப்போது ஜனசேனா கட்சியினர் போலீஸாருடன் வாக்குவாதத்திலும் கைகலப்பிலும் ஈடுபட்டனர். இதையடுத்து பவன் கல்யாண் இப்டாம் கிராமத்திற்கு நடந்து சென்றார்.

ஜனசேனா கட்சி உருவான தினம்
இப்டாம் கிராமத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி ஜனசேனா உருவான தினத்தையொட்டி பவன் கல்யாண் பெரிய அளவில் பொதுக் கூட்டத்தை நடத்த அப்பகுதி மக்கள் அனுமதி அளித்ததாலேயே இங்கிருந்த வீடுகள் இடிக்கப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பவன் கல்யாண் நேரில் சென்றுள்ளார். அப்போது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். வீடிழந்தவர்களை பார்க்கும் போது ஏதோ சினிமா பாணியில் மாஸாக பவன் கல்யாண் சென்றதும் அங்கு அவருக்கு பூக்களை தூவியதும் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன. அது போல் பவன் கல்யாண் தனது ரசிகர்களையும் கட்சியினரையும் கண்டிக்க வேண்டும் என்பதும் சமூகஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்தது.












Click it and Unblock the Notifications