தண்டனை காலம் முடியும் முன்பே விடுதலையாகும் நடிகர் சஞ்சய் 'பரோல்' தத்
மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு நடந்தபோது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகிறார்.
1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குண்டுவெடிப்பிற்கும், அவருக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்தது. ஆனால் அவர் சட்டவிரோதமாக ஏகே-56 ரக துப்பாக்கி வைத்திருந்ததால் ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து 18 மாதங்கள் சிறையில் இருந்த சஞ்சய் தத் ஜாமீனில் வெளியே வந்து தனது தண்டனையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை மறுபடியும் சிறையில் அடைக்குமாறு கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இதையடுத்து புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தத் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நன்னடத்தையால் தண்டனை காலம் முடியும் முன்பே அவர் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுகிறார். தண்டனை காலம் முடிய 7 மாதங்களுக்கு முன்பு விடுவிக்கப்படுகிறார்.
சஞ்சய் தத் அடிக்கடி பரோலில் வெளியே வந்து சென்றதால் விமர்சனத்திற்கு உள்ளானார். கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் முதல் 2014ம் ஆண்டு வரை அவர் 118 நாட்கள் பரோலில் வெளியே இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.