தடையை மீறி ஆந்திர சட்டசபைக்குள் நுழைய முயற்சி.. போலீஸுடன் மோதல்.. மயங்கி விழுந்தார் ரோஜா!
ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேச சட்டசபையில் இருந்து ஓராண்டு இடைநீக்கம் செய்யப்பட நடிகையும், எம்.எல்.ஏ.வுமான ரோஜா தடையை மீறி சட்டசபை வளாகத்துக்குள் வந்தபோது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குறித்து நடிகை ரோஜா சட்டசபையில் ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பிரயோகம் செய்ததாகக் கூறி, சபாநாயகர் கே.சிவபிரசாத ராவ் அவரை ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், சனிக்கிழமை சட்டசபை மீண்டும் கூடியபோது பேசிய, எதிர்க்கட்சித் தலைவரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, பேரவை விதிகளுக்கு மாறாக ரோஜா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். எனவே அவரது இடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறினார்.
சபாநாயகர் இதற்கு மறுப்புத் தெரிவித்ததையடுத்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தடையை மீறி சட்டசபை வளாகத்துக்குள் வந்த ரோஜாவை, போலீஸார் அனுமதிக்க மறுத்தனர். இதனால் ரோஜா போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications