வேண்டுகோள் விடுத்த ஓட்டுநர்கள்... ஆம்புலன்ஸ் ஓட்டிய நடிகை ரோஜா எம்.எல்.ஏ
அமராவதி: ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த நடிகையும், எம்.எல்.ஏ.வுமான ரோஜா திடீரென ஆம்புலன்ஸை ஓட்டியது அங்கிருந்தவர்களை வியப்படைய வைத்தது.
ஆந்திராவில் மருத்துவப்புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், உயிர்காக்கும் அனைத்து உபகரணங்களுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வாரம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக தனது நகரி தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரோஜா கலந்துகொண்டார்.

108 ஆம்புலன்ஸ்கள்
ஆந்திராவில் உயிர்காக்கும் அவசர சிகிச்சைகள் அளிக்கக்கூடிய தரத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை கடந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இதனை தொடங்கி வைத்து பேசினார். ஆம்புலன்ஸ் இல்லை, ஆம்புலன்ஸ் வரத்தாமதம் என்ற அநாவசிய காரணங்களால் எந்த உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் ஜெகன்.

ரோஜா பங்கேற்பு
அந்த வகையில் நகரி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஊரக பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி புத்தூரில் நடைபெற்றது. அதில் அந்த தொகுதியின் எம்.எல்.ஏவும், நடிகையுமான ரோஜா கலந்துகொண்டு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பூஜை செய்தார். பின்னர், அங்கிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிலர் ரோஜாவை பார்த்து, ''நீங்க கொஞ்ச தூரம் முதலில் ஓட்டுங்க மேடம்'' என அன்புக் கோரிக்கை விடுத்தார்கள்.

டிரைவராக ரோஜா
இதையடுத்து எந்த மறுப்பும் தெரிவிக்காத ரோஜா எம்.எல்.ஏ. சட்டென ஆம்புலன்ஸில் ஏறி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தார். அப்போது அங்கிருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் சரி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துவிட்டு இறங்கிவிடுவார் என நினைத்த நிலையில், ரோஜா ஆம்புலன்ஸை ஸ்டார்ட் செய்து ஓட்டத்தொடங்கினார். அதுவும் சைரன் எழுப்பிய வண்ணம் அவர் ஒரு சில கிலோமீட்டர் வரை அவர் ஆம்புலன்ஸை இயக்கினார்.

கடும் விமர்சனம்
நடிகை ரோஜாவின் இந்த நடவடிக்கையை தெலுங்கு தேசம் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. ரோஜா சாகசம் செய்வதற்கு ஆம்புலன்ஸ் தான் கிடைத்ததா எனக் கேள்வி எழுப்பியுள்ளது. அவசர கால ஊர்தியை இயக்க ரோஜாவிடம் உரிய லைசென்ஸ் உள்ளதா எனவும் வினவியுள்ளது. ஏற்கனவே விஜயவாடாவில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்ற நிலையில் மீண்டும் மீண்டும் அதை மற்ற ஊர்களில் நடத்துவது தேவையற்றது என தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications