காவிரி மேலாண்மை வாரியம் பற்றி விவாதம்... சபாநாயகரிடம் அதிமுக எம்பிகள் நோட்டீஸ்!
காவிரி மேலாண்மை வாரியம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக எம்பிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
டெல்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று அதிமுக எம்பிகள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மனு அளித்துள்ளனர்.
காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதற்கான இறுதித் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு, வாரியம் அமைப்பதற்கான பணிகள் நடப்பதால் வெளியே செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறது.
இதனால் தமிழகத்திற்கு உரிமையான காவிரி நீரை முறையாக ஆண்டுதோறும் வழங்குவதை உறுதிப்படுத்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தமிழக அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, அதிமுக எம்பிகள் கூட்டாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக இன்றும் எம்பிகள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று அதிமுக எம்பிகள் சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்துள்ளனர்.