என்.டி.ஆர். பாணி அதிரடியில் குதிக்கிறது அதிமுக.. குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு உண்ணாவிரதம்?
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்து வெளியே கொண்டு வரும் பிரச்சினையை கெளரவப் பிரச்சினையாக கருதும் அதிமுக தற்போது தனது போராட்டத்தை டெல்லிக்கு எடுத்துச் செல்லவுள்ளது. டெல்லியில் நாளை குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர் அதிமுக எம்.பிக்கள்.
முன்பு ஆந்திராவில் என்.டி.ராமாராவ் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டபோது எப்படி அவர் அதிரடியாக டெல்லியில் வைத்து பெரும் போராட்டத்தை நடத்தி கலங்கடித்தாரோ அதேபோல டெல்லியில் ஜெயலலிதாவுக்காக அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தி நெருக்கடியை அதிகரிக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் உடனடியாக ஜெயலலிதாவை ஜாமீனில் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், டெல்லிக்கு தனது கவனத்தை அதிமுக முதல் முறையாக திருப்பியுள்ளது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து இதுகுறித்து முறையிட அதிமுக எம்பிக்கள் குழு முடிவு செய்துள்ளது. ஆனால் பிரணாப் முகர்ஜி தற்போது மேற்கு வங்கத்தில் நவராத்திரி விழாவுக்காக போயுள்ளார். எனவே இப்போதைக்கு அதிமுகவினரால் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தற்போது தங்களது திட்டத்தில் மாற்றம் செய்து நாளை குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட அதிமுக எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளனர். அதிமுகவின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பிக்கள் இணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
மேலும் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications