அதிமுக பொதுச் செயலாளர், முதல்வராக சசிகலா பதவியேற்க வேண்டும் - கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி
முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக வேண்டும் எனவும் சசிகலா அந்த பதவியை ஏற்க வேண்டும் எனவும் கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க வேண்டும் என கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது தோழி சசிகலா அதிமுக பொதுச்செயலராக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். இதுவரை ஜெயலலிதாவின் நிழலாக இருந்து வந்த சசிகலா தற்போது நேரடி அரசியலில் இறங்க தயார் ஆகிவிட்டார்.
இதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்னை போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு சசிகலாவிடம் வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு வருகின்றனர். முதல்வர் பன்னீர்செல்வம் முதல் கட்சியின் கடைக்கோடி நிர்வாகி வரை அனைவரது ஆதரவையும் பெற்றுவிட்டார் சசிகலா. இருப்பினும் அதிமுகவின் ஒரு தரப்பினர் சசிகலா தலைமையை ஏற்க எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளனர். முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக வேண்டும் என கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழக முதல்வராகவும் அதிமுக பொதுச்செயலாளராகவும் சசிகலா பதவியேற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.