ப.சிதம்பரம், கார்த்தி விவகாரம்.. நாடாளுமன்றத்தில் 2-வது நாளாக அதிமுக அமளி!!
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக எம்.பி.க்கள் 2-வது நாளாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
சர்ச்சைக்குரிய ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தின் மூலம் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் கார்த்தி சிதம்பரமும் ஆதாயமடைந்தார்; இந்த ஒப்பந்தத்துக்குப் பின்னர் 14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் முதலீடு செய்துள்ளார் என அமலாக்கப் பிரிவு ஆவணங்களின் அடிப்படையில் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன.
ஆகையால் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற லோக்சபா, ராஜ்யசபாவில் அதிமுக எம்.பிக்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும் நேற்று நாடாளுமன்ற இரு சபைகளிலும் உடனே விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் லோக்சபா மற்றும் ராஜ்யசபா பல முறை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் செயல்படமுடியாமல் ஒத்தி வைக்கப்பட்டது. மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் அதிமுக திடீரென ப.சிதம்பரம் விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டது அரசியல் அரங்கத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மத்திய அரசுக்கு எதிரான ஜேஎன்யூ விவகாரம், ஸ்மிருதி இரானி மீதான உரிமை மீறல் பிரச்சனை, குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் மகளுக்கு முறைகேடாகநிலம் ஒதுக்கீடு போன்றவற்றை எதிர்க்கட்சிகள் எழுப்புவதற்கு போட்டியாக மத்திய அரசை காப்பாற்றும் வகையில் ப.சிதம்பரம் விவகாரத்தை அதிமுக கையிலெடுத்தது என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.
இன்று 2-வது நாளாக நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி.க்கள் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். லோக்சபாவில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், கேள்வி நேரத்துக்குப் பின்னர் இந்த பிரச்சனை விவாதிக்கலாம் என கூறிப் பார்த்தார். ஆனாலும் அதிமுக எம்பிக்கள் அமளி தொடர்ந்தது.
அப்போது அதிருப்தியுடன் குறுக்கிட்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, இதுகுறித்து விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது; இப்படி அமளியில் ஈடுபட வேண்டாம் என்றார். ஆனாலும் அதிமுக எம்பிக்கள் தொடர்ந்தும் லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டனர்.
பின்னர் விவாதத்துக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்தார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
முடங்கியது ராஜ்யசபா
ராஜ்யசபாவிலும் அதிமுக எம்.பிக்கள் இதேபோல் அமளியில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கிட்ட மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ப.சிதம்பரம் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது; அதிமுக எம்.பிக்கள் முதலில் இதற்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்றார்.
இருப்பினும் அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட ராஜ்யசபா நடவடிக்கைகள் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சபை கூடியபோதும் அதிமுக எம்பிக்கள் அமளி தொடர பகல் சபையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அனேகமாக ராஜ்யசபாவிலும் விவாதிக்க அனுமதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக எம்.பி.க்கள் 2-வது நாளாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications