497வது பிரிவு நீக்கம்.. யாருக்கு சாதகமானது.. ஆண்களுக்கா இல்லை பெண்களுக்கா?
கள்ள உறவு குற்றமாகாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Recommended Video

சென்னை: சமீப காலமாக, இந்தியாவில் உள்ள சிக்கலான பிரச்சனைகளுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து வருகிறது.
சமீபத்தில் கூட ஓரின சேர்க்கைக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு ஒரு பக்கம் அமோக வரவேற்பையும் மற்றொரு பக்கம் பலத்த எதிர்ப்பையும் பெற்றது.
[கள்ளக்காதல் குற்றம் கிடையாது.. இந்த சட்டப்பிரிவே தவறானது.. அதிரடி தீர்ப்பின் முழு விபரம்!]

தீர்ப்பு அன்றே அச்சம்
தனிமனித சுதந்திரத்துக்கு ஆதரவாக இந்த தீர்ப்பினை எடுத்து கொண்டாலும் என்னமோ மனம் இதில் ஒப்பவே இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் அடித்தள உண்மை. காரணம் சமூக ஒழுக்கத்துக்கு இந்த தீர்ப்பால் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் இந்த தீர்ப்பு வாசிக்கப்பட்ட அன்றே எழ தொடங்கிவிட்டது.

இலைமறை காயாக...
ஓரின சேர்க்கையாளர்களுக்கு வாழும் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டியது மறுக்க முடியாத உண்மைதான். ஆனால் இந்த தீர்ப்பு, கலாச்சார ரீதியாக வளர்ச்சியடைந்து, பண்பாட்டு விழுமியங்களால் சீரழிந்து கொண்டிருக்கும் மேலை நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதுதான் யதார்த்தம். காலங்காலமாக இலைமறை காய்மறையாக இருளில் நடந்த ஒரு விஷயத்தை சட்டமாக்கியதன் மூலம் கொடூரங்கள் தலைதூக்கும், வன்முறை பெருகும், குற்றங்கள் அதிகரிக்கும், கலாச்சாரம் மேலும் சீரழியும் என்ற கருத்துக்கள் இன்னும் அடங்காத நிலையில் மற்றொரு தீர்ப்பினை இன்று நீதிமன்றம் வழங்கி உள்ளது.

கிரிமினல் குற்றம் இல்லை
கள்ள உறவு என்றாலே ஆண் மட்டுமே தண்டனை பெறுவதாகவும், இது பாலியல் சமத்துவத்திற்கு எதிரானது என்றும் இந்த சட்டத்தையே நீக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது. அதனால் கள்ள உறவில் பெண்ணின் சம்மதத்துடனேயே தவறு நடப்பதால், அந்த பெண்ணையும் சேர்த்து தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதில், திருமண பந்தத்திற்கு வெளியே ஆணும், பெண்ணும் காதல் புரிவதும், பாலியல் உறவு மேற்கொள்வதும் கிரிமினல் குற்றச் செயல் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது.

தனிமனிதம் சார்ந்தது
இப்படி கிரிமினல் குற்றம் இல்லை என்று சொல்லிவிட்டால் நாளடைவில் கள்ள உறவின் எண்ணிக்கைகள் என்னவாகும், முறையற்ற உறவில் ஈடுபடுபவர்களின் மனநிலைமை என்னவாக இருக்கும், இந்த தீர்ப்பு மேலும் ஒழுக்கத்தை குழி தோண்டி புதைத்து விடாதா என்பது போன்ற ஆயிரமாயிரம் கேள்விகள் மக்கள் மனதில் எழுந்து செல்கிறது. ஒருவர் ஒருவரை விரும்பலாம். அது தனிமனித உரிமை. ஆனால் அது மற்றவர்களுக்கு பாதிக்காத வரைதான் அது தனிமனிதம் சார்ந்தது. உடல், மன, சமுதாய ரீதியாக பாதிக்கப்பட்டால் அந்த உறவு தகாத உறவுதான். அது ஆண்-பெண் யாராக இருந்தாலும்!!

தகாமலே போகும்
இந்த தீர்ப்பு ஆண்களுக்கு ஆதரவானதா அல்லது பெண்களுக்கு சாதகமானதா என்பதை போகப் போகத்தான் பார்க்க வேண்டும். ஆனால் எப்படி இருப்பினும், இருபாலாருக்கும் சமமான, ஒருவனுக்கு ஒருத்தி என்பதை மனதில் இரு பாலாரும் நிலை நிறுத்தினால் மட்டுமே உறவுகள் இனிக்கும்.. இல்லையேல் தகாமல்தான் போகும்.












Click it and Unblock the Notifications