இந்தியா-பாகிஸ்தான் உறவு வலுப்பெற வாஜ்பாய் வழியில் பிரதமர் மோடி செல்ல வேண்டும்: அத்வானி அட்வைஸ்
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவு வலுப்பெற முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் பிரதமர் மோடி செல்ல வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து டெல்லி திரும்ப இருந்த நிலையில், திடீரென தனது பயணத் திட்டத்தை மாற்றி பாகிஸ்தானுக்குச் சென்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்தார். இந்த திடீர் பயணம் மற்றும் சந்திப்பினை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன. ஐ.நா. சபையும் வரவேற்றுள்ளது.

மோடியின் இந்த திடீர் பயணத்தினை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் அத்வானி வரவேற்று பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமர் மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம் வரவேற்கதக்கது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவை பேணும் வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் துவக்கி வைத்த முயற்சியை மோடி முன்னெடுத்து செல்ல வேண்டும். வாஜ்பாய் வழியில் நாட்டை மோடியும் மற்றவர்களும் வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று அத்வானி கூறியுள்ளார்.
மோடியின் பாகிஸ்தான் பயணத்தை வரவேற்றுள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இதுபோன்ற முயற்சிகள், அண்டை நாடுகளுடன் இந்தியா நல்லுறவை மேம்படுத்த விரும்புவது தொடர்பான நம்பிக்கையான செய்தியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஒருபுறம் மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம் ஆக்கப்பூர்வமாக இருந்தாலும், எதிர் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications