அத்வானி எதிர்ப்பையும் மீறி வென்ற நரேந்திர மோடி
டெல்லி: நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முன்வைத்தால் அதை எதிர்த்து பகிரங்கமாக ஓட்டளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இல்லாமலேயே மோடியை வேட்பாளராக அறிவித்து விட்டது பாஜக தலைமை.
மோடியை வேட்பாளராக அறிவிப்பதற்கு கடைசி வரை எதிர்ப்பு தெரிவித்து வந்தார் அத்வானி. அவரை யாருமே சமாதானப்படுத்த முடியவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் அத்வானியை மீறி மோடியை வேட்பாளராக்க பாஜக முடிவு செய்தது.
இன்று மாலை நடந்த பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அத்வானி வராமலேயே மோடியை வேட்பாளராக்க ஒப்புதல் பெறப்பட்டு அதை அறிவித்தும் விட்டார் ராஜ்நாத் சிங்.
இக்கூட்டத்தில் மோடி பெயரை முன்வைத்து விவாதிக்கப்பட்டால் அதற்கு எதிராக பகிரங்கமாக தனது கருத்தை அத்வானி முன்வைக்கவுள்ளதாகவும், மிகத் தீவிரமாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டன. ஆனால் அவரோ கூட்டத்துக்கே வரவில்லை.