ஆசம் கானின் எருமைகளை அடுத்து எம்.பி. கதேரியாவின் நாயை தேடி அலையும் உ.பி. போலீஸ்
லக்னோ: ஆக்ரா எம்.பி. ராம் சங்கர் கதேரியாவின் நாய் காணாமல் போயுள்ளதால் அதை தேடும் பணியில் உத்தர பிரதேச மாநில போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா தொகுதி பாஜக எம்.பி. ராம் சங்கர் கதேரியா. முன்னாள் மத்திய அமைச்சரான அவர் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இந்தி பேராசிரியராகவும் உள்ளார். ஆக்ரா பல்கலைக்கழக வளாகத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் ஆசை ஆசையாய் வளர்த்த நாய் காலு காணாமல் போய்விட்டது.

போலீஸ்
உடனே அவரது மனைவி மிருதுலா வெள்ளிக்கிழமை காலை பிராஜ் பகுதி பாஜக பொதுச் செயலாளர் அனில் சவுத்ரி மற்றும் கட்சியினருடன் காரில் ஆக்ரா எஸ்.பி. அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார்.

புகார்
அடையாளம் தெரியாத நபர்கள் தங்களின் நாயை கடத்திவிட்டதாக மிருதுலா தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். காலு என்பது கருப்பு நிற லாப்ரடார் வகை நாய். அது அரிய வகை நாய் என மிருதுலா தெரிவித்துள்ளார்.

நாய் அல்ல
காலு வெறும் நாய் கிடையாது. அது எங்கள் வீட்டு செல்லப் பிராணி என்று சொல்வதை விட எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்றே கூற வேண்டும் என்கிறார் மிருதலா. இதையடுத்து ஹரி பர்வத் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நாயை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

ஆசம் கான்
உத்தர பிரதேச மாநில அமைச்சர் ஆசம் கானின் எருமைகள் காணால் போனபோது போலீசார் அதை கண்டுபிடித்து கொடுத்தார்களே. அப்படி இருக்கும்போது எங்கள் காலுவை ஏன் கண்டுபிடிக்க முடியாது என்று கேட்கிறார் மிருதுலா.












Click it and Unblock the Notifications