ராஜஸ்தானில் காங்கிரசார் மீது தொடரும் பலாத்கார புகார்.. இப்போ சிக்கியது எம்.எல்.ஏ உதய்வால்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் பிரமுகர்கள் மீது அடுத்தடுத்து பலாத்கார புகார்கள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. உதய்வால் அஞ்சானா பாலியல் பலாத்கார புகாரில் சிக்கியுள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்த பாபுலால் நாகர் மீது பலாத்கார புகார் எழுந்தது. அவர் மீதான புகாரை போலீஸ் பதிவு செய்ய மறுத்தது.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றப் படிகளேறினார். இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி பாபுலால் நாகர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து பாபுலால் நாகர் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்ஏ. உதய்வால் அஞ்சானா மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பெண்ணை தாம் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் உல்லாசத்தை அனுபவித்திருக்கிறார் உதய்வால். ஆனால் உறுதி அளித்தபடி திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியுள்ளார்.
தற்போது அந்தப் பெண் எம்.எல்.ஏ. உதய்வால் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.