பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தொடரும் அதிரடி.. ராஜஸ்தானிலும் 3 நாட்கள் இறைச்சி விற்பனைக்கு தடை!
ஜெய்ப்பூர்: பாரதிய ஜனதா ஆளும் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் இறைச்சி விற்பனைக்கு 3 நாட்கள் தடை விதித்து சர்ச்சையை விஸ்வரூபமாக்கியுள்ளது.
பாரதிய ஜனதா ஆளும் மகாராஷ்டிராவில் ஜைன மதத்தினர் திருவிழாவையொட்டி 3 நாட்கள் இறைச்சி விற்பனைக்கு முழுமையாக மும்பை மாநகராட்சி தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் இந்த தடை உத்தரவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தற்போது மகாராஷ்டிராவைப் பின்பற்றி பாரதிய ஜனதா கட்சி ஆளும் ராஜஸ்தான் அரசும் 3 நாட்கள் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜைன மதத்தினரின் விழாவையொட்டி வரும் 17,18 மற்றும் செப். 27 ஆகிய தேதிகளில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக்கு மட்டுமின்றி மதுவிற்பனைக்கும் ராஜஸ்தான் அரசு தடை விதித்தது. இதன் பின்னர் மதுவிற்பனைக்கான தடையை நீக்கியும் ராஜஸ்தான் அரசு அறிவித்திருக்கிறது.