தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, அஸ்ஸாமில் புல்புல் பறவை சண்டைக்கு தடை
கவுஹாத்தி: புல்புல் பறவை சண்டைக்கு தடை விதித்து கவுஹாத்தி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிம் ஹஜோவில் உள்ள ஹயகிரிப் மாதவ் கோவிலில் ஆண்டுதோறும் புல்புல் பறவை சண்டை நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் மிருகவதை தடை சட்டம் 1960ன் கீழ் வருவதாகக் கூறி புல்புல் பறவை சண்டைக்கு தடை விதிக்குமாறு விலங்குகள் நல வாரியம் சார்பில் கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் புல்புல் பறவை சண்டைக்கு தடை விதித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் ஹஜோவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஹயக்ரிப் மாதவ் கோவிலின் பூசாரி ஷிவ பிரசாத் சர்மா கூறுகையில்,
நாங்கள் நீதிமன்ற உத்தரவை எதிர்க்கவில்லை. ஆனால் புல்புல் பறவை சண்டை கோவில் வழக்கப்படி நடத்தப்படும் பாரம்பரியமிக்கதாகும். பறவைகளை பாதுகாத்து சண்டை முடிந்தவுடன் அவற்றை சுதந்திரமாக பறக்கவிட்டுவிடுவோம் என்றார்.
தமிழகத்தில் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போன்று அஸ்ஸாமில் மக் பிகு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் தான் புல்புல் பறவை சண்டை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.