பொங்கும் கங்கை.. பொதுமக்கள் பீதி.. வேறு இடங்களுக்கு ஷிப்ட்
அலகாபாத்: இடைவிடாத மழை காரணமாக கங்கை நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. எனவே, உத்தரபிரதேசத்தின் பிரயாகராஜில் (பழைய பெயர் அலகாபாத்), வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
கங்கையின் சங்கம் காட் பகுதியில் கங்கை நதிக்கு அருகிலுள்ள வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது. ஆற்றின் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

"ஆற்றின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருவதால் நாங்கள் வேறு இடத்திற்கு செல்கிறோம்" என்று கூறுகிறார், உள்ளூர்வாசி ஷரத் திவாரி. "நாங்கள் வேறு இடத்திற்குச் செல்ல வேண்டியிருப்பதால் நிறைய கஷ்டங்களை எதிர்கொள்கிறோம். எல்லாவற்றையும் நாங்கள் விட்டுவிட்டு மேல்பரப்பில் இருக்கும் பகுதிகளுக்கு நகர்ந்துள்ளோம்" என்று மற்றொரு குடியிருப்பாளர் கூறுகிறார்.
உத்தரபிரதேசத்தைத் தவிர, கங்கையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக உத்தரகண்ட் மாநிலத்தின் சில இடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
புதன்கிழமை, ரிஷிகேஷில் கங்கை நதியின் நீர்மட்டம் 338.5 மீட்டர் உயரத்திற்கு அதிகரித்தது. அடுத்த இரண்டு நாட்களில் இப்பகுதியில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications