ராணுவ வீரர் கொல்லப்பட்டதற்கு பதிலடி.. பாகிஸ்தான் ராணுவத்தின் 4 நிலைகளை தகர்த்த இந்திய ராணுவம்
டெல்லி: இந்திய ராணுவ வீரர் ஒருவரை தீவிரவாதிகள் துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவத்திற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் ராணுவத்தின் 4 நிலைகளை தகர்த்துள்ளனர் இந்திய வீரர்கள்.
கெரன் செக்டார் பகுதியிலுள்ள 4 நிலைகளை ராணுவ வீரர்கள் தகர்த்துள்ளனர். மொத்தம் 7 நிலைகள் உள்ள நிலையில், மற்ற மூன்றையும் விரைவில் தகர்ப்போம் என்று ராணுவ அதிகாரி வட்டாரங்கள் 'ஒன்இந்தியாவிடம்' தெரிவித்தன.
இந்த நிலைகளில் இருந்தபடிதான், இந்திய எல்லை, இந்திய துருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்துவது வழக்கம். அந்த சூழ்நிலையை பயன்படுத்தி தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவார்கள். எனவே இந்த 7 நிலைகளையும் தகர்ப்பது இந்திய ராணுவத்தின் இலக்காக இருந்தது.
எப்போதெல்லாம், பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூட்டை அதிகப்படுத்துகிறதோ, அப்போதெல்லாம், இந்தியாவிற்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் முயலுவதையே அது எடுத்துக்காட்டுகிறது.
இருப்பினும், சக இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால், உடனடியாக பாகிஸ்தான் நிலைகளை தகர்த்துள்ளனர். ராக்கெட் லாஞ்சர்கள் இத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இனிமேல் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறைக்கப்படும் என ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.