ஜப்பானில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்! இருதரப்பு உறவை வலுப்படுத்த உறுதி!!
டெல்லி: ஜப்பான் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை நேற்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது இருநாடுகளும் பாதுகாப்பு தொடர்பான உறவை வலுப்படுத்துவது என உறுதியளிக்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் 3 நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அமைச்சர் மனோகர் பாரிக்கரின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இது.

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் போது இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும் இருநாடுகளும் கடல் பாதுகாப்பு தொடர்பாக இணைந்து செயல்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டது. அதற்கு முன்னர் ஜூலை மாதம் இந்தியா-அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் கூட்டு கடற்படை பயிற்சிகளும் நடைபெற்றன.
இந்நிலையில் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் நகடானி அழைப்பை ஏற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமது பயணத்தின் முதல் நாளில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பாதுகாப்புத் துறை அமைச்சர் நகடானி ஆகியோரை நேற்று மனோகர் பாரிக்கர் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புகளின் போது இருநாடுகளின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக ஆசிய-பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் அமைதி மற்றும் அரசியல் நிலைத்தன்மையை வலுவாக்குவது குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் விவாதித்ததாக பாதுகாப்பு அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணமானது இருநாடுகளும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதற்கும் இருதரப்பு பாதுகாப்பு தொடர்பிலான உறவை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையிலும் அமைந்ததாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அடுத்த ஆண்டு இந்தியா வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications