பலாத்காரத்தை எதிர்த்த மைத்துனி, பார்த்த தம்பி மகன் கொலை: ரியல் எஸ்டேட் அதிபர் கைது
டெல்லி: பாலியல் பலாத்காரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தம்பி மனைவியையும், அதை பார்த்த அவரது மகனையும் கொலை செய்த நபர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தென்கிழக்கு டெல்லியின் அமர் காலனியில் வசிப்பவர் ராஜ்குமார். இவரது தம்பியும், அதே குடியிருப்பின் மேல் தளத்தில் குடும்பத்துடன் வசித்துவந்தார். அண்ணனும், தம்பியும், சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். ராஜ்குமார் திருமணம் செய்த பெண்ணின் தங்கையைத்தான் தனது தம்பிக்கும் மணம் முடித்து வைத்தார்.

நள்ளிரவில் படுக்கையறைக்குள்
சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாருடன் தகராறு செய்துவிட்டு அவரது மனைவி, தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனால் தனது வீட்டில் தனியாகத்தான் இருந்தார் ராஜ்குமார். சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய ராஜ்குமாரின் சகோதரர் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மொட்டை மாடியில் சென்று படுத்துள்ளார். இதைப்பார்த்த ராஜ்குமார் நள்ளிரவில் தம்பி மனைவியின் படுக்கையறைக்குள் நுழைந்துள்ளார்.

கழுத்தை நெறித்து கொலை
தூங்கிக்கொண்டிருந்த தம்பி மனைவியை பலாத்காரம் செய்ய தொடங்கியுள்ளார். தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்த அந்த பெண், மைத்துனரின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்து கோபத்தில் திட்டியுள்ளார். தனது கணவனை அழைக்கப்போவதாக மிரட்டியுள்ளார். தம்பிக்கு தெரிந்தால் அவமானம் என்று நினைத்த, ராஜ்குமார், மைத்துனியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அப்போது பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த தம்பியின் 10 வயது மகன் தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளான்,.

தம்பி மகனையும் காவு வாங்கிய பாவி
சிறுவனை உயிரோடு விட்டால் காட்டிக்கொடுத்துவிடுவான் என்று நினைத்த ராஜ்குமார், அவனையும் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். தம்பியின் மற்றொரு மகன் அசந்து தூங்கிக்கொண்டிருந்ததால் அவனை எதுவும் செய்யாமல்விட்டுவிட்டார். இதன்பிறகு ஒன்றும் தெரியாதவரைப்போல தனது வீட்டுக்குச் சென்று படுத்துக்கொண்டார். இதனிடையே அதிகாலை 4.30 மணிக்கு ராஜ்குமாரின் தம்பி, தனது படுக்கையறைக்கு வந்துள்ளார். மனைவியை எழுப்ப முயன்றபோது அவர் உணர்வற்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தனது மகனும் அதேபோல கிடப்பதை பார்த்து அழுது புலம்பியுள்ளார்.

டாக்டர்கள் ஊர்ஜிதம்
இந்த சத்தத்தை கேட்டுவிட்டு வருபவர் போல ராஜ்குமாரும் அங்கு வந்து சேர்ந்தார். இதையடுத்து தம்பி மனைவியையும், மகனையும் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லவும் ராஜ்குமார் உதவியுள்ளார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கழுத்தில் கைவிரல் தடங்கள் இருப்பதை பார்த்து இது கொலை என ஊர்ஜிதம் செய்த டாக்டர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணையை துவக்கினர்.

போலீசில் சிக்கினார்
குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ராஜ்குமார் மட்டும் வழக்கை திசைதிருப்பும் நோக்கில் வாக்குமூலம் அளிப்பதை கவனித்தனர். அவரின் கைகளில் கீறல் காயம் இருந்ததை பார்த்த போலீசார் அதுகுறித்து கேட்டதற்கு சரியான பதிலை அவர் அளிக்கவில்லை. சந்தேகம் தீவிரமானதும், காவல்துறை தனது வழக்கமான பாணியில் விசாரித்தபோது ராஜ்குமார் நடந்த சம்பவங்களை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அழுகை நாடகம்
கொலை செய்ததை மறைப்பதாக நினைத்துக் கொண்டு, இறந்தவர்களின் உடல்களை பார்த்து ராஜ்குமார்தான் கதறி, கதறி அழுதுள்ளார். இதுதான் போலீசாருக்கு முதலில் சந்தேகத்தை உருவாக்கியதாக காவல்துறையினர் கூறினர். ராஜ்குமார் மீது இரட்டைக் கொலை வழக்கு மட்டுமின்றி, பாலியல் பலாத்கார முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications