மேற்கு வங்கம், பஞ்சாப்பை தொடர்ந்து ஹரியானா.. 'பிடிவாத' காங்கிரஸுடனான கூட்டணியை முறிக்கும் ஆம் ஆத்மி!
சண்டிகர்: மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து ஹரியானா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடனான உறவை ஆம் ஆத்மி முறித்துக் கொள்ளக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 லோக்சபா தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அல்லது 4 தொகுதிகள் ஒதுக்க ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் முன்வந்தது. ஆனால் இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ், முதல்வர் மமதா பானர்ஜியை கடுமையாக விமர்சித்து வந்தது. இதனால் கொந்தளித்த மமதா பானர்ஜி, லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது; இந்தியா கூட்டணியில்தான் நீடிப்போம். மேற்கு வங்கத்தில் தனித்தே போட்டியிடுவோம் என அதிரடியாக அறிவித்தார்.

இதேபோல பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனையடுத்து காங்கிரஸுடனான உறவை முறித்து கொள்வதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தனித்தே போட்டியிடும் என்றார்.
இதனிடையே பீகார் மாநிலத்தில் "இந்தியா" கூட்டணியை உருவாக்கிய அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், ஒட்டுமொத்தமாக கூட்டணிக்கே குட்பை சொல்லி விட்டு மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த பின்னணியில் தற்போது ஹரியானாவிலும் ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே மோதல் வெடித்துள்ளது. ஹரியானாவில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் அதிகமான தொகுதிகளை தங்களை ஒதுக்க கோருகிறது காங்கிரஸ். ஆனால் ஆம் ஆத்மி இதனை ஏற்க மறுக்கிறது. இதனையடுத்து முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, ஹரியானாவின் 10 தொகுதிகளிலுமே காங்கிரஸ் தனித்தே போட்டியிட தயாராக இருக்கிறது என்றார். இத்தகைய அறிவிப்பை ஆம் ஆத்மி ரசிக்கவில்லை. இதனால் ஹரியானா மாநிலத்திலும் காங்கிரஸ்- ஆம் ஆத்மி இடையேயான உறவு முறியும் என்கிற அறிவிப்பு எந்த நிமிடத்திலும் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள "இந்தியா" கூட்டணி இருக்குமா? இல்லையா ? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications