ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: ஆந்திர ஆளுநரிடம் சிபிஐ விசாரணை
ஹைதராபாத்: வி.வி.ஐ.பிக்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கியபோது நடந்த ஊழல் குறித்து ஆந்திர கவர்னர் நரசிம்மனிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
முந்தைய, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் ஆட்சி காலத்தில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதற்காக, இத்தாலி - பிரிட்டிஷ் கூட்டு நிறுவனமான, அகஸ்டா வெஸ்ட்லாண்ட் என்ற நிறுவனத்திடம், மத்திய அரசு, ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக,இந்தியாவைச் சேர்ந்த வி.ஐ.பி,க்களுக்கு, அந்த நிறுவனம், 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து சி.பி.ஐ.,விசாரித்து வருகிறது.
ஹெலிகாப்டர் வாங்குவது குறித்து 2005ம் ஆண்டு மார்ச் 1ம்தேதி, நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், சிறப்பு பாதுகாப்பு படையின், முன்னாள் இயக்குனர் வான்ச்சூ ஆகியோரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, தான் வகித்து வந்த மே.வங்க ஆளுநர் பதவியை நாராயணனும், கோவா ஆளுநர் பதவியை வான்ச்சூவும் ராஜினாமா செய்தனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மனும் இவ்வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்டார். அவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி இன்று நரசிம்மனிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
ஹெலிகாப்டர் ஒப்பந்தம் நடைபெற்ற 2005ம் ஆண்டு நரசிம்மன் இந்திய உளவுத்துறை இயக்குநராக இருந்தார் என்பதால் அவரையும் சாட்சியமாக சேர்த்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த டீல் குறித்த பேச்சுவார்த்தை நடந்தபோது, நரசிம்மனும் அந்த கூட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. சிபிஐ விசாரணையை தொடர்ந்து, ஆந்திர ஆளுநரும் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
x












Click it and Unblock the Notifications