பீகார் தேர்தலுக்காக நில ஆர்ஜித அவசர சட்டத்தைக் கைவிட்ட மோடி அரசு...
டெல்லி: நில ஆர்ஜித அவசர சட்டங்களை அடுத்தடுத்து பிறப்பித்து சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது பீகார் சட்டசபை தேர்தலுக்காக அதை கிடப்பில் போட முடிவு செய்திருப்பது என்பது பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல்வேறு அம்சங்களுடன் நில ஆர்ஜித மசோதாவை கொண்டுவந்தது. பின்னர் மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்த போது இதில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
இந்த திருத்தங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு எதிரானதாகவும் பெருமுதலாளிகளுக்கு ஆதாவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மோடி அரசின் நில ஆர்ஜித திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

3 முறை அவசர சட்டம்
இதனால் நாடாளுமன்றம் முடங்கியது... வேறுவழியின்றி மத்திய அரசு நில ஆர்ஜிதத்துக்கான அவசர சட்டங்களை பிறப்பித்தது. 3 முறை இதேபோல் நில ஆர்ஜித அவசர சட்டங்களை பிறப்பித்துப் பார்த்தது மத்திய அரசு. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் விவசாயிகளுக்கு எதிரான பெரு நிறுவனங்களுக்கு ஆதரவானதுதான் மோடி அரசு என்ற பிம்பத்தை நிலைநிறுத்தத் தொடங்கினர்.

4வது முறை?
இதையடுத்து வேறுவழியில்லாமல் நில ஆர்ஜித மசோதாவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்களையெல்லாம் ஏற்பதற்கு இறங்கி வந்தது மோடி அரசு. இந்த நிலையில் நில ஆர்ஜித அவசர சட்டம் ஆகஸ்ட் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் மீண்டும் இதற்காக ஒரு அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரலாம் எனக் கூறப்பட்டது.

பதுங்குதல்?
அதே நேரத்தில் ஓரிரு மாதங்களில் பீகார் சட்டசபைக்கான தேர்தல் நடைபெறும் நிலையில் விவசாயிகளின் கோபத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காக மோடி அரசு பதுங்கவும் செய்யலாம் எனக் கூறப்பட்டது.

கைவிட்டது மோடி அரசு
பீகார் சட்டசபைக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் மூன்றும் கை கோர்த்து நிற்கிறது. இத்தேர்தலில் எப்படியும் வென்றாக வேண்டும் என்ற வாழ்வா? சாவா? போராட்டத்தில் பாரதிய ஜனதா இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டே தற்போது நில ஆர்ஜித அவசர சட்டத்தைக் கைவிட்டு விட்டது மோடி அரசு.
இதன் மூலம் விவசாயிகளுக்கு எதிரானது மோடி அரசு அல்ல என்பதை நிரூபிக்க பிரயத்தனப்படுகிறது பாரதிய ஜனதா.
இருப்பினும் பீகார் தேர்தலுக்கான ஸ்டண்ட்தான் இது என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப கை பிசைந்து நிற்கிறது பாரதிய ஜனதா.












Click it and Unblock the Notifications