அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி எல்லையில் வாலாட்டும் பாக்... துப்பாக்கிச் சூடு - பதட்டம்!
ஜம்மு: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை டெல்லி வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி மிஷலும் வந்துள்ளார். முன்னதாக ஒபாமா இந்தியா வரும்போது எந்தவித தாக்குதலும் நடத்தக் கூடாது என்று அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் இன்று காலை அத்துமீறி நடந்துள்ளது.
இது குறித்து ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில்,
பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ். புரா செக்டரில் இருக்கும் எல்லை பாதுகாப்பு படையினரின் நிலைகள் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூடு அதிகாலை 1 மணி முதல் 1.15 மணி வரை நடந்தது என்றார்.