நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவில் 9 திருத்தங்கள்: எதிர்க்கட்சிகளை சமாளிக்க மத்திய அரசு முடிவு!
டெல்லி : நிலம் கையகப்படுத்துதல் மசோதா மீது 2வது நாளாக இன்றும் மக்களவையில் விவாதம் நடைபெற்றது. வாக்கெடுப்பு நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே தங்களது எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தன.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் சில திருத்தங்களை செய்து அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது .

அதன்படி நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணியின் உள்ள சிவசேனாவும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. மசோதாவை ஆதரிப்பதா வேண்டாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்று சிவசேனா தெரிவித்தது. ஆனால், பாஜகவின் மற்றொரு கூட்டணி கட்சியான அகாலிதளம் இச்சட்டத்திற்கு ஆதரவு தர முன்வந்தது.
இதனிடையே, மசோதா மீது வாக்களிக்க வசதியாக பாஜக எம்.பி.கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேபோல, எதிர்த்து வாக்களிக்க வசதியாக காங்கிரஸ் எம்.பிக்கள் அனைவரும் பங்கேற்க அக்கட்சியும் கொறடா உத்தரவு பிறப்பித்தது.
இந்த சட்டம் விவசாயிகளின் உரிமையை பறிக்கும் திட்டத்துடன் கொண்டுவரப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே மக்களவையில் நடைபெற உள்ள வாக்கெடுப்பு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே எதிர்க்கட்சிகளை சமாளிப்பதற்காக, சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 9 திருத்தங்களை அரசு கொண்டுவந்து நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் 9 திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது. இந்த 9 திருத்தங்களும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சமூக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு விலக்கப்பட்ட பிரிவில் நிலம் கையகப்படுத்த முன்பு வகை செய்யப்பட்டிருந்தது. அது நீக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரெயில் பாதைகளின் இரு புறமும் ஒரு கிலோ மீட்டர் வரை நிலம் கையகப்படுத்துதலை கட்டுப்படுத்துவது தொடர்பான திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேம்பாட்டு திட்டங்களுக்கு காலி நிலங்களை மாநில அரசுகள் கையகப்படுத்தி கொடுக்கும் பிரிவிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப்படி நிலத்தை இழப்பவர்கள், முதலில் கோர்ட்டுக்கு செல்வதற்கு பதில் மாவட்ட நிர்வாகத்தை அணுகும் திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று 2வது நாளாக நடைபெற்ற விவாதத்தில், தேவகவுடா உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் பங்கேற்று பேசி, அரசுக்கு ஆலோசனைகளை எடுத்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications