சாலை விதிகளை ஒழுங்கா பாலோ செய்றீங்களா? உங்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் “ஃப்ரீ”!
அகமதாபாத்: போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைபிடித்தவர்களுக்கு குஜராத் போலீசார் ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கி கவுரவித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடிமக்களை ஒரு வித்தியாசமான வழியில், போக்குவரத்து விதிமுறைகளைக் கடைபிடிக்க வைக்கும் வகையில் இந்த இலவச அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அதனையடுத்து, முதலாவதாக குஜராத்தின் அகமதாபாத்தின் ரமோல் பகுதியில் சரியாக விதிமுறைகளை பின்பற்றியவர்களுக்கு நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலை போக்குவரத்து துறை போலீசார் இலவசமாக வழங்கினர்.

58 பேருக்கு மேல் இலவச பெட்ரோல்:
"கிட்டதட்ட 58க்கும் மேலான எண்ணிக்கையில் போக்குவரத்து விதிமுறைகளைச் சரியாக பின்பற்றியவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல், ரமோல் பகுதி போலீசாரின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது" என்று போலீஸ் அதிகாரி பி.ஐ. சோலாங்கி தெரிவித்தார்.

சரியான முக்கிய ஆவணங்கள்:
"போலீசார் ஒவ்வொரு வாகனங்களாக சோதனை செய்து, ஓட்டுநர்களின் யாரெல்லாம் முக்கியமான ஆவணங்களான லைசென்ஸ், ஆர்சி புக் வைத்துள்ளார்கள் என்று பட்டியலிட்டனர்.

ஹெல்மெட், சீட்பெல்ட் அவசியம்:
மேலும், சரியான வகையில் ஹெல்மெட் அணிந்திருந்தோர், சீட் பெல்ட் அணிந்தவர்கள் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுமக்களிடம் வரவேற்பு:
"இந்த நடைமுறையை பொதுமக்களுக்கு உற்சாகத்தையும், போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளோம். இதற்கு மக்களிடம் இருந்தும், வாகன ஓட்டிகளிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது" என்றும் தெரிவித்துள்ளார்.

எட்டு டூ எட்டு விழிப்புணர்வு:
இந்த போக்குவரத்து பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரமானது இன்னும் மூன்று நாட்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் தொடர்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரி சோலாங்கியின் ஐடியா:
இந்த இலவச பெட்ரோல் விழிப்புணர்வு ஐடியாவினை சோலாங்கிதான் உருவகப் படுத்தியுள்ளார். மேலும், இதனால் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், காவல்துறை மீதான மதிப்பினையும் அதிகரித்துள்ளார்.

புரிந்து கொண்ட பெட்ரோல் பங்க்:
"இந்த விழிப்புணர்வுக்காக இரண்டு பெட்ரோல் பங்குகளுடன் பேசி, அவர்களுக்கு இதுகுறித்து புரிய வைத்தேன். அவர்களும் இந்த பிரச்சாரத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உணவும் ஃப்ரீ ஃப்ரீ:
இதனைத் தொடர்ந்து, சாலைவிதிகளைப் பின்பற்றுபவர்களுக்கு இலவச உணவுக் கூப்பன்களையும் போலீசார் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
எப்படியோ சாலை விதிகளை மதித்து, விபத்துகள் குறைந்தால் நல்லதுதான்!












Click it and Unblock the Notifications