தோற்போம் என சுதாரித்துக் கொண்டு சூதானமாக அத்தனை சித்து வேலைகளையும் செய்தது பாஜக: அகமது படேல்
குஜராத் தேர்தலில் தோல்வியைத் தழுவிவிடுவோம் என உணர்ந்து அத்தனை வியூகங்களையும் வகுத்துக் கொண்டு பாஜக செயல்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் தெரிவித்துள்ளார்.
டெல்லி: குஜராத் தேர்தலில் தோல்வியைத் தழுவிவிடுவோம் என உணர்ந்து அத்தனை வியூகங்களையும் வகுத்துக் கொண்டு பாஜக செயல்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அகமது படேல் கூறியதாவது:
குஜராத்தில் நகர்ப்புற இளைஞர்களை ஈர்ப்பதற்காக காங்கிரஸ் கட்சி புதிய வியூகம் வகுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் முதல் கட்ட தேர்தலில் 4 அல்லது 5 இடங்களில் பாஜக, காங்கிரஸை விட முன்னிலையில் இருந்தது.

வியூகம் வகுத்து களம்
இதனால் அந்த கட்சி தோல்வியை நன்றாகவே உணர்ந்து கொண்டது. இதையடுத்து 2-ம் கட்ட தேர்தலின் போது அனைத்து வகையான யுக்தியையும் கையிலெடுத்தது பாஜக. நகர்ப்புறங்களில் பாஜக 55 இடங்களில் 43 தொகுதிகளைக் கைப்பற்றி இருக்கிறது.

புரிந்து கொள்ள முடியவில்லை
காங்கிரஸைப் பொறுத்தவரையில் மிக தீவிரமாகத்தான் செயல்பட்டோம். நகர்ப்புறங்களில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டங்கள் வெற்றிகரமாகத்தான் நடந்தன. ஆனால் சூரத்தில் ஒரே ஒரு இடமும் அகமதாபாத்தில் 4 இடங்களில் மட்டுமே எங்களால் வெல்ல முடிந்தது என்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

கூடுதல் முயற்சி தேவை
நகர்ப்புற இளைஞர்களுடன் ராகுல் காந்தி நெருக்கமான உரையாடலைத்தான் நடத்தினார். இருந்தபோதும் கூடுதல் முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டிருக்க வேண்டும்தான்... கிராமப்புறங்களில் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்யாத வாக்காளர்களிடையே ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் செல்வாக்கு செலுத்தியிருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது.

ட்வீட்டுகளால் பிரளயம்
சில முன்னாள் ராணுவத்தினர் அகமது படேலைத்தான் முதல்வராக்க வேண்டும் என பதிவுகளைப் போட்டனர். இது பாஜகவை விரக்தியடைய வைத்துவிட்டது. ராகுல் காந்தியுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறேன். ராகுல் காந்தியிடம் மாற்றங்களைப் பார்க்க முடிகிறது. ராகுல் காந்தி வெளிப்படையாக பகிரங்கமாகவே பேசுகிறார்.
இவ்வாறு அகமது படேல் கூறினார்.












Click it and Unblock the Notifications