அகமதாபாத் விமான விபத்து.. ஒருவரை தவிர 241 பேரும் உயிரிழப்பு.. ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் ஒருவரைத் தவிர 241 பேரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உயிர் பிழைத்த ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்தில் சிக்கியது. அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நொடிகளிலேயே சிக்னலை இழந்த நிலையில், அடுத்த சில நொடிகளில் மேகானி நகரில் இருந்த பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து நொறுங்கி இருக்கிறது.

அகமதாபாத் விமான விபத்து
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் மொத்தமாக 242 பேர் பயணித்தனர். அதிலும் 7 குழந்தைகள் உட்பட 230 பயணிகளும், 2 பைலட் மற்றும் 10 விமான ஊழியர்களும் பயணித்துள்ளனர். விமானம் விழுந்து வெடித்து சிதறியதால், அப்பகுதியில் எங்கும் கரும்புகை சூழ்ந்தன. இதன்பின் உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கிய நிலையில், பயணிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன.
241 பேர் பலி
அந்த விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே தப்பி பிழைத்த நிலையில், மீதமுள்ள 241 பேரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதிலும் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர். மகளை பார்க்க லண்டன் புறப்பட்ட போது, விமான விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்.
ஏர் இந்தியா அறிவிப்பு
மொத்தமாக 169 இந்திய பயணிகள், 53 பிரிட்டன் பயணிகள், 7 போர்ச்சுகல் பயணிகள், 1 கனடா பயணி உயிரிழந்திருக்கின்றனர். இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு அறிவித்துள்ளது.
விசாரணைக்கு ஒத்துழைப்பு
அதேபோல் விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை கொடுக்கும் என்று உறுதி அளித்துள்ளது. விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பாக விமானி தரப்பில் மே டே அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், விமானத்தில் உள்ள ப்ளாக் பாக்ஸ் கிடைத்தால் மட்டுமே விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
அகமதாபாத் வரும் பிரதமர்
இதனிடையே விமானம் விபத்து நடந்த இடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்போது பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் புறப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர் விமான விபத்தை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications