உலக புராதன நகரம் அகமதாபாத்... முதல் முறையாக யுனெஸ்கோ அறிவிப்பு
உலக புராதன நகரமாக அகமதாபாத்தை யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
அகமதாபாத்: ஐ.நா.சபையின் யுனெஸ்கோ அமைப்பானது முதல் உலக புராதன நகரமாக இந்தியாவின் அகமதாபாத்தை அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (யுனெஸ்கோ), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. இது கடந்த 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16- ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. இந்த அமைப்பானது உலகின் பல்வேறு புராதன நகரங்களையும், சின்னங்களையும் பார்வையிட்டு அவற்றை பழமை வாய்ந்த புராதன சின்னமாக அறிவித்து வருகிறது.
அகமதாபாத் அறிவிப்பு
இந்தியாவில் பல இடங்கள் புராதன சின்னம் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில் குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்தை புராதன நகரமாக யுனெஸ்கோ நேற்று அறிவித்துள்ளது. இதை அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் வரவேற்றுள்ளனர்.
முதல்வர் மகிழ்ச்சி
இதுகுறித்து ரூபானி கூறுகையில் யுனெஸ்கோவின் அறிவிப்பு எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே முதலாவது புராதன நகரமாக அகமதாபாத் அறிவிக்கப்பட்டுள்ளது இன்னும் சிறப்பு என்றார்.
பெருமைப்பட வேண்டும்
அகமதாபாத்தை யுனெஸ்கோ உலக புராதன நகரமாக அறிவித்து இருப்பதை ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும்.முதல் முறையாக இந்திய நகரத்தை அறிவித்துள்ள யுனெஸ்கோவுக்கு நன்றி என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
போட்டியில் வெற்றி
புராதன நகரம் பட்டியலில் இடம் பெறுவதற்கான போட்டியில் அகமதாபாத், டெல்லி, மும்பை ஆகிய நகரங்கள் பங்கேற்றது. ஆனால் அந்த பெருமையை அகமதாபாத் தட்டிச் சென்றது. 606 ஆண்டுகளுக்கு முன்பு அகமதாபாத்தில் மன்னர் அகமது ஷாவால் சுற்றுச் சுவருடன் கூடிய கோட்டை கட்டப்பட்டது.
காந்தி வசித்தார்
இங்கு மகாத்மா காந்தி 1915-ஆம் ஆண்டு முதல்1930-ஆம் ஆண்டுவரை வசித்தார். இந்த நகரத்தில் இருந்து சுதந்திரப் போராட்டத்தை தொடங்கினார். 2011-ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அகமதாபாத் நகரை புராதன நகரமாக அறிவிப்பதற்கான பட்டியலில் சேர்த்து ஆய்வு மேற்கொண்ட நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.