600 அடி உயரம்.. 324 கிமீ வேகம்.! திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா விமானம்! முக்கிய தகவல்
காந்தி நகர்: இன்று குஜராத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட விமானம் திடீரென விபத்தில் சிக்கியது. விமானம் மக்கள் குடியிருப்பு நிறைந்த பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. இதற்கிடையே விமானத்திற்கு என்ன ஆனது என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் 600 அடி உயரத்தில் இருந்து அது விழுந்து நொறுங்கியது தெரிய வந்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியது.. குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு நேரடியாகச் செல்லும் ஏர் இந்தியா ட்ரீம்லைனர் ரக விமானம் 242 பேருடன் புறப்பட்டுள்ளது.

230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் என மொத்தம் 242 பேர் இருந்த நிலையில், விமானம் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. அந்த விமானம் 1.10 மணிக்குக் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட வேண்டியது. அது ஏழு நிமிடங்கள் தாமதமாக 1.17 மணிக்கே குஜராத்தில் இருந்து கிளம்பியுள்ளது.
ஏர் இந்தியா விமானம்
இது அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு இயக்கப்படும் தினசரி விமானமாகும். ஒவ்வொரு நாளும் இந்த விமானம் மதியம் இந்திய நேரப்படி 1.10 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து கிளம்பும். லண்டன் நேரப்படி மாலை மறுநாள் மாலை 6.25 மணிக்கு அது லண்டனில் தரையிறங்கும். மொத்தமாக விமானத்தின் பயண நேரம் 9 மணி நேரமாக இருக்கும்.
இன்று அந்த விமானம் சற்று தாமதமாக 1.17 மணிக்கே குஜராத்தில் இருந்து கிளம்பியுள்ளது. இதற்கிடையே விமானங்கள் குறித்த தகவல்களை டிராக் செய்தும் பிளைட் ரேடார் 24ல் சில முக்கிய தகவல்களைப் பார்க்க முடிகிறது. அதாவது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அது விபத்தில் சிக்கியுள்ளது.
322 கிமீ வேகம்
விமானம் 625 அடி உயரத்தில் 174 கேடிஎஸ், அதாவது 322 கிமீ வேகத்தில் செல்லும்போது விமானத்தின் சிக்னல் துண்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு விமானத்தில் என்ன நடந்தது என்பது குறித்த டேட்டா அந்த தளத்தில் இல்லை. அப்போது தான் விமானம் மே டே என விமான கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு கூறியிருக்கிறார். பொதுவாக விமானத்தில் எதாவது ஆபத்து ஏற்பட்டால் இந்த மே டே அலர்ட் கொடுப்பார்கள்.
விமானி மே டே அலர்ட் கொடுத்த உடனேயே திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து விமானம் குடியிருப்பு பகுதியில் மோதியுள்ளது. இந்த விமானத்தில் விமான ஊழியர்களுடன் சேர்ந்து மொத்தம் 242 பேர் பயணித்த நிலையில், அவர்கள் அனைவருமே விபத்தில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
625 அடி உயரம்
எனவே, விமானம் 625 அடி உயரத்தில் பறக்க தொடங்கிய போதே, அது கட்டுப்பாட்டை இழந்திருக்கும் என தெரிகிறது. உடனடியாக அதன் உயரம் குறைய தொடங்கிய நிலையில், ஒரு கட்டத்தில் அது மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் விழுந்து நொறுங்கியது தெரிய வந்துள்ளது.
பிளாக் பாக்ஸ்
விபத்து தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் விமானம் அப்படியே கீழ் நோக்கிப் பறப்பதும், அது விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து மிகப் பெரிய தீப்பிழம்பு வருவதும் தெளிவாகத் தெரிகிறது. விமானத்தின் கறுப்பு பெட்டியை மீட்டு ஆய்வு செய்தால் மட்டுமே விபத்திற்கான காரணம் தெளிவாகத் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications