ஜெயலலிதா பல்கலை. விவகாரம்: சாலை மறியல் செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் - கைது செய்த காவல்துறையினர்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதைக் கண்டித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான 2021ம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்தம் மற்றும் நீக்கறவு சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
அந்த சட்டமசோதாவின்படி, அதில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. இதன் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒற்றைப் பல்கலைக்கழக வகையிலிருந்து (Unitary) இணைப்புப் பல்கலைக்கழகமாக (Affiliated) மாற்றப்பட்டது.
2021ம் ஆண்டு இயற்றப்பட்ட டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை நீக்குவதாகவும் அரசு முடிவு செய்துள்ளது என அந்த மசோதாவில் கூறப்பட்டிருந்தது.
- ஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா?
- எம்.ஜி.ஆர் நிழலில் தொடங்கிய ஜெயலலிதாவின் அரசியல் பயணம் எப்படி இருந்தது?
இந்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்த எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் சட்டத்தை ஆரம்ப நிலையிலே எதிர்க்கிறோம் என கூறினார். இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
ஆனால், இந்த மசோதா விவாத்திற்கு வரும்போது இது குறித்துப் பேசலாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் பிறகு பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
வெளியே சென்ற அதிமுக உறுப்பினர்கள், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கத்தை விட்டு வெளியேறி வாலாஜா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஓ. பன்னீர்செல்வமும் இந்த மறியலில் பங்கேற்றார். இதையடுத்து காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
விழுப்புரத்தில் சி.வி. சண்முகம் கைது
தமிழக அரசின் சட்டத்திருத்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மறியலில் ஈடுபட்டார்.
அவருடன் அ.தி.மு.கவினர் சுமார் 100 பேரும் மறியலில் அமர்ந்தனர். இதனால், புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் பிறகு கைதுசெய்யப்பட்டனர்.
ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம்
வேலூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரம் மாவட்டத்தை தலைமையகமாகக் கொண்டு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கான சட்டம் கடந்த பிப்ரவரி ஐந்தாம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்குப் பிறகு வெளியிடப்பட்ட அரசாணையின்படி 2021-22 ஆம் கல்வியாண்டு முதல் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தில் இணைப்புப் பெறும் எனக் கூறப்பட்டது.
இந்தப் பல்கலைக்கழகத்திற்கு என புதிதாக கட்டடங்கள் ஏதும் இல்லாத நிலையில் விழுப்புரம் திரு.வி.க சாலையில் அமைந்துள்ள பழைய தாலுக்கா அலுவலம் புனரமைக்கப்பட்டு, 'டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்' எனப் பெயர் சூட்டப்பட்டது.
கடந்த மே மாதம் புதிதாகப் பதவியேற்ற தி.மு.க. அரசு, ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு என கட்டமைப்புகள் ஏதும் இல்லாத நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதாக அறிவித்தது. இதற்கு அதிமுக ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பிற செய்திகள்:
- 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மனைவி மீது ஆசிட் வீசி கொன்ற கணவர்
- ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதும் விலகிய அமெரிக்கா - 20 ஆண்டு போர், 25 முக்கிய தகவல்கள்
- அமெரிக்காவின் தாக்குதலில் குழந்தைகள் பலி: கண்ணீர் வடிக்கும் குடும்பம்
- கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு இதய பாதிப்பு - அறிகுறிகள் என்னென்ன?
- மூக்குதான் மூலதனம்: பல்லுயிர் பெருக்கத்தை காக்க போராடும் மோப்ப நாய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















Click it and Unblock the Notifications