இரட்டை இலை யாருக்கு? அக்.6ல் தேர்தல் ஆணையம் விசாரணை- சசி, தினகரனுக்கு செக்!
இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது பற்றி முடிவு செய்ய தேர்தல் கமிஷன் வருகிற அக்டோபர் 5ஆம்தேதி விசாரணை நடத்த இருக்கிறது.
டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.அன்றைய தினம் ஆஜராகுமாறு ஓபிஎஸ்,எடப்பாடி அணிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல் தேர்தல் ஆணையத்திடம் இன்று அளிக்கப்பட உள்ளது. இதற்காக அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டது. ஆர்.கே. நகர் தேர்தலின் போது சின்னத்திற்காக ஓபிஎஸ், சசிகலா அணிகள் மோதியதால் கட்சியின் பெயரையும், தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.
ஆவணங்கள் தாக்கல்
இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என்று சசிகலா தலைமையிலான அணியினரும், ஓபிஎஸ் தலைமையிலான அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் லட்சக்கணக்கில் ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
இணைந்த அணிகள்
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அந்த அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வந்தது. பின்னர் அந்த அணியும், ஒபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தன. சசிகலா அணியின் ஒரு பிரிவினர் துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் செயல்பட்டு வருகிறார்கள்.
தினகரன் சிக்கல்
ஓபிஎஸ்,ஈபிஎஸ் அணியினர் ஒன்றாக இணைந்து தற்போது இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோருகிறார்கள். இதேபோல் டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்படும் அணியினரும் உரிமை கோருகிறார்கள்.
நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.கே.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு கடந்த 15ஆதேதி விசாரணைக்கு வந்தது.
தாமதம் ஏன்?
அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், இரட்டை இலை சின்னத்தை பெற அ.தி.மு.க. அணிகள் சார்பில் மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதால் அந்த சின்னத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
அக்டோபர் 30க்குள் முடிவு
இதைத்தொடர்ந்து நீதிபதிகள்,அதிமுகவின் இரு அணிகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்றும், சட்டப்படியும், தகுதி அடிப்படையிலும் விசாரணை நடத்தி இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது பற்றி வருகிற அக்டோபர் 30ஆம்தேதிக்குள் தேர்தல் கமிஷன் இறுதி முடிவு எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
அக்டோபர் 6ல் விசாரணை
மதுரை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது பற்றி முடிவு செய்ய தேர்தல் கமிஷன் வருகிற அக்டோபர் 5ஆம்தேதி விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் இரட்டை இறுதி விசாரணை, அக்டோபர் 6ம் தேதிக்கு மாற்றம் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
இது குறித்து தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது அணியைச் சேர்ந்த அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு தேர்தல் அணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தாக்கல் செய்ய உத்தரவு
அதில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தங்கள் தரப்பிலான ஆவணங்களை ஏதாவது தாக்கல் செய்வதாக இருந்தால் அவற்றை வருகிற 29ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு கூறி உள்ளது.
டிசம்பர் 5, 2016 நிலவரம் என்ன?
கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம்தேதி நிலவரப்படி இருந்த பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலையும் தாக்கல் செய்யுமாறு தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டு இருக்கிறது. அக்டோபர் 6ஆம் தேதி மாலை 3 மணிக்கு விசாரணை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டெல்லி பயணம்
இதனிடைய செப்டம்பர் 12ஆம் தேதியன்று அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. அந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல்களை தேர்தல் ஆணையத்திடம் அளிப்பதற்காக அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், உதயகுமார், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர், டெல்லி சென்றனர். தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று காலையில் சந்தித்து ஆவணங்களை அளித்தனர்.
சசிகலா தினகரனுக்கு பின்னடைவு
டிசம்பர் 5ஆம் தேதியன்று நிலவரப்படி இருந்த நிர்வாகிகளின் பட்டியலை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் அப்போது சசிகலா கட்சியில் முக்கிய பொறுப்பில் இல்லை. அதேபோல டிடிவி தினகரனும் கட்சி பொறுப்பில் இல்லை. எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சசிகலா, தினகரனுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும் என்று தெரிகிறது.