பெங்களூரு தேர்தலில் ‘இரட்டை இலை’ சின்னத்தை இழந்த அதிமுக வேட்பாளர்கள்... ’மிக்சி’யில் போட்டி
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், அவர்கள் சுயேட்சையாகவே போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சி தேர்தல், வரும், 22ம் தேதி நடை பெற இருக்கிறது. பெங்களூரு மாநகரின் சில பகுதிகளில், தமிழர்கள் அதிகமாக வசிப்பதால் அங்கு அதிமுக போட்டியிட வேண்டும் என கட்சித் தொண்டர்கள் விரும்பினர். இதற்கு கட்சித் தலைமையும் அனுமதி கொடுத்தது.

எனவே, அதிமுக சார்பில் ஏழு வார்டுகளில் வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். வேட்புமனு தாக்கல் துவங்குவதற்கு முன், சின்னம் ஒதுக்கீட்டுக்கான அனுமதி கடிதத்தை இந்த வேட்பாளர்கள் பெறவில்லை. இதனால், இந்தத் தேர்தலில் இந்த ஏழு வேட்பாளர்களுக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காது.
இது தொடர்பாக கர்நாடக அதிமுக வினர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘கர்நாடகாவில் அதிமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்க முடியாது' என மறுப்புத் தெரிவித்தார்.
இதன் காரணமாக, பெங்களூரு மாநகராட்சித் தேர்தலில் இந்த வேட்பாளர்களுக்கு மிக்சி சின்னமே கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications