காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி.. 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் சுட்டதில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் உள்ள ஆரம்போரா என்ற கிராமத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள இந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அவர்கள் நடத்திய அதிரடி வேட்டையில் தீவிரவாதிகளின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக, காஷ்மீர் மண்டல காவல்துறை அறிவித்துள்ளது.
இன்னும் அந்த பகுதியில் உள்ள தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் ஊடுருவ கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.