விமானத்தின் எல்லா பாகங்களும் நாசம்.. ஆனால் பத்திரமாக இருந்த "பகவத் கீதை.." பொதுமக்கள் வியப்பு
காந்திநகர்: ஏர் இந்தியா விமானம் கடந்த ஏப்ரல் 12ம் தேதி மிக மோசமான விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதீத வெப்பத்தில் எரிந்து நாசமாகியது. இருந்த போதிலும் விமானத்தின் சிதைவுகளுக்கிடையே பகவத் கீதை புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டது. கடுமையான தீ விபத்திலும் பகவத் கீதை சேதமடையாமல் இருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது தொடர்பான படங்களும் இணையத்தில் பரவி வருகிறது.
அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக்கிற்கு கிளம்பிய ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். விமானம் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் விழுந்தன. குறிப்பாக, அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தியது.

விமான விபத்து
விமானத்தில் இருந்த 241 பேரைத் தவிர, மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 24 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே எரிந்து கருகிய விமானச் சிதைவுகளுக்கிடையில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை கண்டுபிடிக்கப்பட்டது.
அப்படியே இருந்த பகவத் கீதை
விமானம் விபத்திற்குள்ளான போது அதில் 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் இருந்தது. இதனால் மிகப் பெரியளவில் தீப்பிழம்பு ஏற்பட்டது. இதன் காரணமாகவே விமான விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை. ஆனால், அந்த அதீத வெப்பத்திலும் கூட பகவத் கீதை புத்தகம் எந்தவொரு பெரிய சேதமும் இல்லாமல் இருந்துள்ளது. விமானத்தில் இருந்த மற்ற பொருட்கள் எரிந்து நாசமான போதும் பகவத் கீதை சேதமடையாமல் இருந்தது பலருக்கும் ஆச்சரியமளிக்கிறது
சேதம் இல்லை
இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பகவத் கீதையின் அட்டைகள் மட்டுமே லேசாகச் சேதம் அடைந்து இருந்தது. மற்றபடி உள்ளே இருந்த பக்கங்கள் அனைத்தும் தெளிவாகவும், எந்தவித சேதமும் இல்லாமல் அப்படியே இருந்தன.
இது தொடர்பாக விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் கூறுகையில், "இது ஒரு பயணியின் உடைமையாக இருந்திருக்கலாம். யாராவது படித்துக் கொண்டிருந்திருக்கலாம். அதனால்தான் இது இங்கே இருக்கிறது. கடுமையான வெப்பத்திலும் இது சேதமடையாமல் அப்படியே இருக்கிறது" என்றார். இந்த பகவத் கீதையின் போட்டோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் இது தொடர்பா பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.
விமான விபத்து
இந்த விபத்தில் விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பிரிட்டிஷ் நாட்டவர் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மற்ற அனைவரும் உயிரிழந்தனர். இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் நடந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதில் பயணித்த குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு கருப்புப் பெட்டி (black box) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்தால் மட்டுமே விபத்திற்கான காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications