லேண்டிங் கியர்+ இறக்கைகள்! ஏர் இந்தியா விமானத்தில் நடந்தது இதுதான்! பிரபல ஏவியேஷன் வல்லுநர் மேஜர் தகவல்
காந்திநகர்: ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் இன்று விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர். இதற்கிடையே விமானம் விபத்திற்குள்ளான வீடியோவை ஆய்வு செய்த பிரபல ஏவியேஷன் வல்லுநர் விமானத்தில் அசாதாரண சூழல் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாகக் கூடுதல் தகவல்களை நாம் பார்க்கலாம்.
ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் இன்று விபத்தில் சிக்கியது. அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணித்த 242 பயணிகளும் உயிரிழந்தனர். இதற்கிடையே விமானம் விபத்திற்குள்ளான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அதில் விமான விபத்து தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. முதற்கட்ட ஆய்வில் விமான விபத்தின் வீடியோவை பார்க்கும்போது விமானத்தின் அமைப்பு மற்றும் இறுதி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
2 தவறுகள்
போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்படும்போது, அதன் லேண்டிங் கியர் இறக்கப்பட்ட நிலையிலும், இறக்கைகள் முழுவதுமாக மூடப்பட்ட நிலையிலும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. பொதுவாக விமானம் டேக் ஆஃப் ஆகும்போது இதுபோல இருக்காது. வழக்கமாக 787 விமானங்களின் இறக்கைகள் டேக் ஆஃப் ஆகும்போது லெவல் 5 (அல்லது அதற்கு மேல்) என்ற நிலையில் திறந்தே இருக்க வேண்டும். விமானம் வேகம் அதிகரித்து, போதிய உயரத்தை எட்டிய பிறகே அது படிப்படியாக மூடப்பட வேண்டும். ஆனால், இந்த விமானத்தின் இறக்கைகள் மூடப்பட்ட நிலையில் இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேலும், பொதுவாக, விமானம் மேலே எழும்பி சில நொடிகளில், அதாவது 600 அடியை அடைவதற்கு முன்பே லேண்டிங் கியர் மூடப்பட வேண்டும். ஆனால், ஏர் இந்தியா விமானம் 600 அடியைத் தாண்டியபோது தான் விபத்தில் சிக்கியது. ஆனால், அதுவரை விமானத்தின் லேண்டிங் கியர் அப்படியே இருந்ததும் பல கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.
என்ன காரணம்!
ஒருவேளை இயந்திரக் கோளாறு அல்லது ஹைட்ராலிக் செயலிழப்பு காரணமாக லேண்டிங் கியர் உள்ளே இழுக்கப்படாமல் இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், அதிகப்படியான இழுவை காரணமாக விமானத்தின் வேகம் குறையும் என்பதால், விமானிகள் இறக்கைகளைச் சீக்கிரம் மூட முயற்சி செய்திருக்கலாம். ஆனால், விமானம் குறைந்த உயரத்தில் பறக்கும்போது இறக்கைகளை வேகமாக மூடுவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், இது விமானத்தின் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும்.
தெளிவாகத் தெரியவில்லை
இந்த சிக்கல்கள் இருந்தபோதிலும், விமானம் நிலையாகவே பறந்துள்ளது. விமானிகள் கட்டுப்பாட்டை இழக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. மேலும், விமானத்தில் வலது எஞ்சின் பழுதடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.. ஆனால் அப்படியே எஞ்சின் பழுதடைந்து இருந்தாலும் கூட லேண்டிங் கியர் இறக்கப்பட்ட நிலையிலும் இறக்கைகள் மூடப்பட்ட நிலையிலும் ஏன் இருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஏனெனில் விமானம் நார்மலாக இருந்திருந்தால் லேண்டிங் கியரும், இறக்கைகளும் இந்த நிலையில் இருக்கக் கூடாது என்கிறார் நாகார்ஜுன் துவாரகாந்த். உரிமம் பெற்ற கம்ஷியல் பைல்ட்டான இவர் இந்தியா டூடே செய்தி சேனலில் இந்த கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
வினோதம்
600 அடி உயரத்தில் லேண்டிங் கியர் இறக்கப்பட்டும், இறக்கைகள் மூடப்பட்டும் இருந்தது மிகவும் வினோதமான நிகழ்வு. இது தொழில்நுட்பக் கோளாறு அல்லது விமானியின் அவசரக்கால நடவடிக்கையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. போதுமான வேகம் இல்லாததாலும், அதிகப்படியான இழுவை ஏற்பட்டதாலும், விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இருப்பினும், இது உறுதியான தகவல் இல்லை. மேலும், இதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கவில்லை. விமானத்தின் கருப்புப் பெட்டியை ஆய்வு செய்த பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications