‛ஏர் இந்தியா' விமான விபத்துக்கு என்ன காரணம்? இங்கிலாந்து எக்ஸ்பர்ட் சொன்ன அதிர்ச்சி தகவல்
அகமதாபாத்: அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 8 நிமிடத்தில் இந்த விமானம் கீழே விழுந்தது. இந்நிலையில் தான் விமானம் விபத்தில் சிக்கியது பற்றி இங்கிலாந்தை சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1:39 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் அடுத்த 8 நிமிடத்தில் விபத்தில் சிக்கியது. அகமதாபாத் விமான நிலையம் அருகே பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர். இதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர். மொத்தம் 130க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
இதுதொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த சேப்ஃடி இன்ஜினியரிங் எக்ஸ்பர்ட்டான ஜான் மெக்டெர்மித் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இவர் யார்க் பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இதுபற்றி ஜான் மெக்டெர்மித் கூறுகையில், ‛‛இந்த விமான விபத்துக்கான காரணம் உள்பட பிற விவரங்கள் மிக விரைவில் தெரியவரும். ஆனால் முதற்கட்டமாக பார்க்கும்போது இந்த விமான விபத்து ஆச்சரியமானதாகவும், அதிர்ச்சியளிக்கும் வகையிலும் உள்ளது.
விமானம் இயக்குவதில் விமானம் புறப்படுதல் மற்றும் தரையிறங்குவது ஆகிய 2 விஷயங்கள் தான் மிகவும் ஆபத்தானவையாகும். இந்த விமானம் 650 அடி உயரத்துக்கு மேல் பறக்கவில்லை. அப்படியென்றால் தரையில் இருந்து 200 மீட்டர் உயரம் வரை மட்டுமே பறந்துள்ளது. விமான நிலையத்தில் விமானம் புறப்படும் முன்பு பிரச்சனை கண்டறியப்பட்டு இருந்தால் அதன் பயணத்தை தாமதமாக்கி இருக்கலாம்.
இதனால் விமானம் தரையில் இருந்து புறப்பட்ட பிறகு அல்லது விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று பிரச்சனை ஏற்பட்டது போல் தெரியும். மேலும் இந்த பிரச்சனை சரி செய்ய முடியாத அளவுக்கு மிகவும் தீவிரமாக இருந்துள்ளது. பொதுவாக விமானங்கள் தரையில் இருந்து வானை நோக்கி மேல்நோக்கி செல்ல இன்ஜின் உள்பட பல அமைப்புகளை கொண்டுள்ளது.
ஒரெயொரு இன்ஜினின் உதவியுடன் கூட வானில் மேல்நோக்கி பறக்கும் அம்சங்கள் உள்ளன. இருப்பினும் இந்த விமானம் மேல்நோக்கி செல்லாமல் தரையில் விழுந்து இருப்பது என்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications