விமானி கேபினுக்குள் திடீர் புகை: ஏர் இந்தியா விமானம் அவசரமாக டெல்லியில் தரையிறக்கம் !
டெல்லி: டெல்லியில் இருந்து மிலன் நகருக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில், விமானியின் கேபினுக்குள் இருந்து திடீர் புகை வெளியேறியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து 167 பயணிகளுடன் மிலன் நகருக்கு சென்று கொண்டிருந்தது ஏர் இந்தியா விமானம். அந்த விமானம் கிளம்பி 40 நிமிடத்தில் நடுவானில் சென்று கொண்டிருந்த போது திடீரென விமானி கேபினுக்குள் இருந்து புகை கிளம்பியது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பி கொண்டுவரப்பட்டு சுமார் 4.40 மணியளவில் தரையிறக்கப்பட்டது. 167 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமான கேபினிற்குள் தீடிரென புகை கிளம்பியதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலமாக மிலன் அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விமானம் தரையிறக்கப்படுவதற்கு முன்பு விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
Air India flt 137 Delhi to Milan which departd at 1500 hours has reportd smoke inside the cabin.Full emergency landing back at IGI.
— CP Delhi (@CPDelhi) January 26, 2016