50 லட்சம் பயணங்கள், 100 கோடி பயணிகள்! 14 ஆண்டுகளில் போயிங் 787-8 விபத்தில் சிக்குவது இதுவே முதல்முறை
டெல்லி: ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று குஜராத்தில் விபத்தில் சிக்கியது. ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் தான் விபத்தில் சிக்கியது.. இந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் கடந்த 2011ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த 14 ஆண்டுகளில் இந்த விமானம் சந்திக்கும் முதல் பெரிய விபத்து இதுவாகும்.
242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் AI171 விமானம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 1.15 மணியளவில் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் அது கட்டுப்பாட்டை இழந்தது. பிறகு அது குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. விபத்துக்குச் சற்று முன்பு, விமானிகள் "மே டே" அபாய அழைப்பை விடுத்தனர்.. ஆனால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிலிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.

விமான விபத்து
விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் தீப்பிழம்புகள் கிளம்பின. அடர்த்தியான புகை பல கிமீ தொலைவிலும் தெரியும் அளவுக்கு உயரமாக எழுந்தது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் மீட்பு பணிகளைத் துரிதமாக மேற்கொண்டனர். இதில் இதுவரை 90+ பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
14 ஆண்டுகளில் முதல்முறை
போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம் மேஜர் விபத்தில் சிக்குவது இதுவே முதல்முறையாகும். இந்த விமானம் கடந்த 2011ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 14 ஆண்டுகளில் சுமார் 1000+ 787-8 ட்ரீம்லைனர் விமானங்களை போயிங் டெலிவரி செய்துள்ளது. அவை எதுவும் ஒரு முறை கூட மேஜர் விபத்தில் சிக்கியதே இல்லை.
போயிங் நிறுவனத்தின் வரலாற்றிலேயே அதிகம் விற்பனையாகும் விமானமாக 787-8 விமானம் இருக்கிறது. இந்த ரக விமானங்கள் உலகெங்கும் இதுவரை 100 கோடி பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. இது மற்ற வைட் பாடி (Wide body aircraft) விமானத்தை விட வேகமானது.. மேலும், 25 சதவீதம் வரை குறைந்த எரிபொருளை மட்டுமே பயன்படுத்தும்.
பாதுகாப்பானது
போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த விமானங்களில் மூன்று மடங்கு பாதுகாப்பு கொண்ட ஃப்ளை-பை-ஒயர் கட்டுப்பாட்டுக் கருவிகள், கலப்பு உலோகக் கட்டமைப்புகள் மற்றும் நவீன வசதிகள் உள்ளன.
முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு சிறிய பேட்டரி தீப்பிடித்த சம்பவங்கள் இந்த வகை விமானங்கள் நிகழ்ந்தன. இதன் காரணமாக, இந்த விமானங்கள் தற்காலிகமாக தரையிறக்கப்பட்டன. மேலும், வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் பிறகு மீண்டும் அவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. அந்த சிறிய விபத்துக்களும் கூட எதிலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இந்த விமானம் மிகவும் பாதுகாப்பானது என்று பெயர் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
போயிங் விமானம்
ஒரு முறை எரிபொருளை நிரப்பினால் இந்த லாங் ஹால் விமானம் அதிகபட்சம் 13,530 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கும் திறன் கொண்டது. கண்டங்களுக்கு இடையிலான சேவைகளில் பொதுவாக இந்த வகை விமானங்களே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை விமானத்தில் அதிகபட்சமாக 248 பயணிகள் வரை பயணிக்கலாம். ஏர் இந்தியாவிடம் இப்போது 27 போயிங் 787-8 விமானங்கள் உள்ளன.
ஏர் இந்தியா
ஏர் இந்தியா நிறுவனத்தைக் கடந்த 2021-2022 காலகட்டத்தில் தான் டாடா நிறுவனம் வாங்கியது. அதன் பிறகு இண்டிகோவுக்கு கடும் போட்டியைத் தரும் வகையில் டாடா நிறுவனம் விமானங்களை வாங்கி குவித்து வருகிறது. இப்போது வரை ஏர் இந்தியாவிடம் ஏகப்பட்ட வைட் பாடி விமானங்கள் உள்ளன. ஏர்பஸ் ஏ350 ரக விமானங்கள் 6, போயிங் 777-300 ஈஆர் ரக விமானங்கள் 19, போயிங் 777-200 எல்ஆர் ரக விமானங்கள் 5, போயிங் 787-9 ரக விமானங்கள் 7 உள்ளன. இப்போது விபத்தில் சிக்கிய போயிங் 787-8 விமானங்கள் தான் அதிகபட்சமாக 27 ஏர் இந்தியா வசம் உள்ளது.
இன்று மதியம் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டினர், ஒரு கனடியர் மற்றும் ஏழு போர்ச்சுகல் நாட்டினர் இருந்தனர். மேலும், லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்லவிருந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் 10 பணியாளர்கள் இருந்தனர்.












Click it and Unblock the Notifications